பாம்பன் பஸ் பாலத்தின் மைய இணைப்பு சேதமடைந்துள்ளது
Ramanathapuram, Tamil Nadu:ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம்-ராமேஸ்வரம் தீவு பகுதியில் கடலை இணைக்கும் வகையில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் ஸ்திரத்தன்மைக்காக, மத்திய பகுதியில் இரும்பு சட்டங்கள் நிறுவப்பட்டுள்ளன. இவ்வழியாக கனரக வாகனங்கள் செல்வதால், இரும்பு சட்டத்தை இணைக்கும் ஆணிகள் வெளியே வந்தன. இவ்வழியாக செல்லும் வாகனங்களின் டயர்கள் பழுதடைந்து விபத்து அபாயம் உள்ளது. இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பாலத்தை சீரமைக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|
'ஜனநாயகன்' போஸ்டர் கிழிப்பு... விஜய்க்கு எதிர்ப்பு - கர்நாடகாவில் பரபரப்பு
Mandya, Karnataka:Cauvery Dispute Protest In Karnataka : கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் ஜனநாயகன் திரைப்படம் திரையிடப்பட்டுள்ள குருஸ்ரீ திரையரங்கு முன்னர் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தி, படத்தின் போஸ்டரை கிழித்து விஜய்க்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
#WATCH | Mandya, Karnataka: Amid rising tensions over the Cauvery issue, posters of Tamil Nadu CM Vijay’s film 'Jana Nayagan' were removed in Mandya.
— ANI (@ANI) July 30, 2026
The film posters and banners of actor and Tamil Nadu CM Vijay’s movie that had been put up at Gurushree Theatre in Mandya were… pic.twitter.com/IkXvSMDAou
காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறப்பதை கண்டித்து கன்னடம் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி கர்நாடகாவுக்கு வருகை தர உள்ள தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் விஜய் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ஜனநாயகன் திரைப்படம் திரையிடப்படும் திரையரங்குகளில் பதற்றம் அதிகமாகி உள்ளது.
Bye Bye Jinks... அஜிங்கயா ரஹானே ஓய்வு - மறக்க முடியாத இந்த 3 பெஸ்ட் ஆட்டங்கள்!
Mumbai, Maharashtra:Ajinkya Rahane Retirement : சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக இந்திய அணியின் மூத்த வீரர் அஜிங்கயா ரஹானே இன்று அறிவித்துள்ளார். 2011ஆம் ஆண்டில் இந்திய அணியில் அறிமுகமான இவர், 2013ஆம் ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
அதேநேரத்தில், 2018ஆம் ஆண்டுக்கு பின்னர் ஓடிஐ மற்றும் டி20ஐ போட்டிகளில் இடம்பெறாத ரஹானே தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடி வந்தார். கடைசியாக 2023ஆம் ஆண்டு மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக விளையாடியதுதான் இவரது கடைசி டெஸ்ட் போட்டியாகும்.
கர்நாடகாவுக்கு செக்... மேகதாது அணை DPR நிராகரிப்பு - இனி அடுத்தது என்ன?
Saggayam 'A' Beat, Karnataka:Mekedatu Dam : மேகதாது அணையின் விரிவான திட்ட அறிக்கை கடந்த 2019ஆம் ஆண்டு கர்நாடக அரசு மத்திய அரசிடம் தாக்கல் செய்தது. ஆனால், அப்போதே விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரித்தது. தாக்கல் செய்யப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை திருத்தியோ அல்லது புதிய விரிவான திட்ட அறிக்கையோ தாக்கல் செய்யலாம் என மத்திய அரசு, கர்நாடகாவிடம் தெரிவித்திருந்தது.
இதையடுத்து, 2019ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட விரிவான திட்ட அறிக்கையில் புதிய கூறுகளை சேர்க்குமாறு கடந்த 2026 ஏப்ரல் 21ஆம் தேதி அன்று மத்திய நீர் ஆணையத்திற்கு கர்நாடக அரசு கடிதம் எழுதியுள்ளது.
ஆனால், கர்நாடக அரசு கடிதத்தில் குறிப்பிட்டிருந்தவை காவிரி நடுவர் மன்றம் மற்றும் 2018 உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முரணாக இருப்பதாக கூறி, அதை மீண்டும் கர்நாடக அரசுக்கே கடந்த ஜூன் 29ஆம் தேதி திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாக மத்திய நீர் ஆணையம் தெரிவித்துள்ளது.
2019ஆம் ஆண்டு விரிவான திட்ட அறிக்கையில் பெங்களூரு நகரின் குடிநீர் தேவைக்காக 4.75 TMC நீரை மேகதாது அணமை மூலம் எடுத்துக்கொள்வோம் என கர்நாடக அரசு தெரிவித்திருந்தது. ஆனால், தற்போதைய கடிதத்தில் அஅதை 6.95 TMC ஆக கர்நாடகா உயர்த்திருக்கிறது. 2019இல் கூறியதை விட 2.2 TMC நீர் அதிகம்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி கர்நாடக அரசால் 6.50 TMC நீரை மட்டுமே பயன்படுத்த முடியும். ஆனால், அதற்கு மாறாக கூடுதல் நீரைப் பயன்படுத்த வேண்டி கோரிக்கை வைக்க இயலாது என மத்திய நீர் ஆணையம் தெரிவித்துள்ளது.
பூவுலகின் நண்பர்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்த கேள்விக்கு மத்திய நீர் ஆணையம் பதில் அளித்துள்ளது. அதில் சிவனசமுத்திரம் மின் உற்பத்தி திட்டமும், மேகதாது அணை திட்டமும் இணைக்கும் வகையில் உள்ளன.
காவிரி ஆற்றின் நீரை அதிகளவில் பயன்படுத்தும் வகையில் மேகதாது திட்டம் இருப்பதால் கர்நாடக அரசு தாக்கல் செய்த விரிவான திட்ட அறிக்கை கடந்த மாதம் திருப்பி அனுப்பப்பட்டது.
மேலும் படிக்க | Explained: மேகதாது அணை கட்ட தமிழ்நாட்டின் ஒப்புதல் தேவையா? மத்திய அரசு vs தமிழக அரசு
“தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கிடையாது..” கர்நாடக முதல்வர் அதிரடி! என்ன செய்யப்போகிறார் CM விஜய்?
Nagalapuram, Tamil Nadu:தமிழ்நாட்டிற்கு, இப்போதைக்கு தண்ணீர் கொடுக்க முடியாது என்று கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்மார் ஸ்ட்ரிக்ட் ஆக கூறியிருப்பது மக்களை கலக்கமடைய செய்துள்ளது. ஏற்கனவே தமிழ்நாட்டில் வறட்சி நிலவும் அபாயம் ஏற்பட்டிருக்கும் நிலையில், இப்போது கர்நாடகாவும் கை விரித்திருப்பது கவலை அளித்திருக்கிறது.
“தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கிடையாது”
ஏற்கனவே, தமிழ்நாட்டிற்கு கர்நாடகாவிற்கும் காவிரி நீர் திறந்து விடுவதில் பஞ்சாயத்து இருக்கிறது. தமிழ்நாட்டுக்கு, ஜூலை 29ஆம் தேதியான இன்று தொடங்கி, அடுத்த 15 நாட்களுக்கு, 4.5 டிஎம்சி தண்ணீர் கொடுக்க வேண்டுமென காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு தெரிவித்திருந்தது. இந்த சமயத்தில், கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது என கூறியிருப்பது இந்த பிரச்சனையை இன்னும் அதிகரித்திருக்கிறது.
மேலும் படிக்க | பள்ளி மாணவர்களுக்கு சிக்கன் பிரியாணி! தமிழ்நாடு பட்ஜெட்டில் வரும் முக்கிய அறிவிப்பு?
கடந்த ஜூன் மாதம் தொடங்கி, ஜூலை மாதம் வரை தோராயமாக 40.43 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால், தற்போது வரை வெறும் 3.54 டிஎம்சி அளவுக்கு மட்டுமே தண்ணீர் திறந்துவிடப்பட்டிருக்கிறது. இதையடுத்து, சமீபத்தில் ஒழுங்காற்று குழு கூட்டம் நடந்தது. இதைத்தொடர்ந்து, ஜூலை 29ஆம் தேதியான இன்று காலை 8 மணி முதல், அடுத்த 15 நாட்களுக்கு சுமார் 3,500 கன அடி வீதம் 4.5 டிஎம்சி தண்ணீர் திறந்து விடப்பட வேண்டும் என்று, இக்குழு உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவு வந்த பிறகும் தண்ணீர் திறக்கப்படவில்லை. கர்நாடகாவில் பருவமழை இந்த அண்டு போதுமான அளவு பெய்யாததால், இங்கிருக்கும் அணைகளுக்கு நீர் வரத்து குறைந்திருப்பதாகவும், குடிநீர் தேவைக்கு மட்டுமே தண்ணீர் இருப்பு உள்ளதாகவும் கர்நாடகா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒழுங்காற்று குழுவின் இந்த உத்தரவை எதிர்த்து, மேல்முறையீடு செய்ய இருப்பதாக தெரிவித்ததையடுத்து, தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க முடியாது என்று கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் கூறியிருக்கிறார்.
என்ன செய்யப்போகிறார் விஜய்?
தமிழ்நாடு முதல்வர் விஜய், காவிரி நீர் பங்கீடு மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி கர்நாடகா செல்ல திட்டமிட்டிருந்தார். இந்த பயணத்தின்போது, கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமாரை நேரில் சந்தித்து பேச இருக்கும் அவர், பெங்களூரு-ஓசூர் மெட்ரோ ரயில் திட்டம் மற்றும் இரு மாநிலங்களின் நலன் சார்ந்த விஷயங்களை விவாதிக்க இருப்பதாக கூறப்பட்டது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எல் நினோ பாதிப்பால் தமிழ்நாட்டின் முக்கியமான சில மாவட்டங்கள் வறட்சியில் பாதிக்கப்படுவதை ஒட்டி, குறைவான மழைப்பொழிவு, நீர் நிலைகள் மற்றும் அணைகளில் நீர் தேக்கம் இன்மை உள்ளிட்டவை இவர் சந்திக்கப்போகும் பெரிய சவாலாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | மக்களே உஷார்! நாளை (ஜூலை 30) இந்த பகுதிகளில் கரண்ட் இருக்காது - முழு லிஸ்ட் இதோ!
விஜய் vs தனுஷ்: 2031 தேர்தலில் திமுக, அதிமுகவே இருக்காது - ஜோதிடர் ரதன் பண்டிட் கணிப்பு
Chennai, Tamil Nadu:Dhanush Political Entry : 1967, 1977 சட்டப்பேரவை தேர்தல்களை போன்று 2026 சட்டப்பேரவை தேர்தலும் தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் மிக முக்கிய இடத்தை பிடித்துள்ளது. 2024ஆம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்கப்பட்ட ஒரு கட்சி, அடுத்த 2 ஆண்டுகளில், அதாவது 2026ஆம் மே மாதம் ஆட்சியை பிடிக்கிறது. தவெகவின் இந்த அசாத்திய வெற்றிக்கு 'விஜய்' என்ற ஒற்றை மந்திரமே காரணம்.
முதலமைச்சர் விஜய்யின் தவெகவுக்கு 108 இடங்களே கிடைத்தாலும், கடந்த அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டை ஆட்சி செய்துவந்த திமுக மற்றும் அதிமுக முறையே இரண்டாவது, மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டன. கூட்டணி கட்சிகளை சேர்க்காமல் திமுக 59 இடங்களிலும், அதிமுக 47 இடங்களிலும் வென்றன.
திமுகவுக்கு இருக்கும் சிக்கல்
1967, 1971 தேர்தலுக்கு பின்னர் திமுக தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியமைக்கவே இல்லை. 2011ஆம் ஆண்டு தோல்விக்கு பின்னர் சுமார் 10 ஆண்டுகள் திமுக காத்திருந்தது. 2021ஆம் ஆண்டில்தான் ஆட்சியை பிடித்தது. நிச்சயம் 2026 தேர்தலை திமுக வெல்லும் என பல அரசியல் பார்வையாளர்கள் கணித்த நிலையில், தவெக அனைத்தையும் தவிடுபொடியாக்கியது.
அதிமுகவுக்கு வரும் பிரச்னைகள்
திமுக பிரதான எதிர்க்கட்சியாக உள்ள நிலையில், அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டு எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்திருக்கிறது. தேர்தலுக்கு பின்னர் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வென்று 6 எம்எல்ஏக்கள் இதுவரை தங்களின் பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்துள்ளனர்.
இதனால், அதிமுகவின் எம்எல்ஏ பலம் 41 ஆக குறைந்திருக்கிறது. மேலும், அதிமுகவின் கட்சியும் பலம் இழந்துள்ளது. அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள், நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் தவெகவிலும், மாற்றுக் கட்சியிலும் தொடர்ந்து இணைந்து வருகின்றனர்.
அதேநேரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் உள்ளிட்டோர் கடும் அதிருப்தியில் இருப்பதையும் பார்க்க முடிகிறது. திமுக, அதிமுக உள்ளிட்ட இருப்பெருந்திராவிடக் கட்சிகளே தவெகவுக்கு எதிர்த்து தனித்து களமாடுவது கடினமாகி இருக்கிறது. விஜய்யை ஆட்சிக் கட்டிலில் இருந்து 2031ஆம் ஆண்டில் திமுக, அதிமுக எப்படி கீழிறக்கும் என்பதே பலரின் கேள்வியாக உள்ளது.
விஜய் vs தனுஷ்
அந்த வகையில், விஜய்யின் ஜோதிடர் என அறியப்படும் ரிக்கி ராதன் பண்டிட் 2031 சட்டப்பேரவை தேர்தல் குறித்து பரபரப்பான கணிப்பை தெரிவித்துள்ளார். 2031ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் தவெகவை எதிர்க்க திமுகவும், அதிமுகவும் ஒன்று சேரும் என்றும்; அதேநேரத்தில் தனுஷ் அரசியலுக்கு வந்தால், தவெகவுக்கு அவர்தான் முக்கிய எதிரியாக இருப்பார் என்றும் கணித்துள்ளார்.
திமுக, அதிமுகவை ஓரங்கட்டும் தனுஷ்
தனியார் யூ-ட்யூப் சேனலின் நிகழ்ச்சி ஒன்றின் மேடையில் பேசிய அவர், "நான் முன்கூட்டியே ஒரு நேர்காணலில் 2031ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் திமுகவும், அதிமுகவும் ஒன்றிணைந்துதான் எதிர்க்கும் என சொல்லியிருந்தேன்.
இப்போது சொல்கிறேன், 2031ஆம் ஆண்டில் ஒருவேளை தனுஷ் அரசியலுக்கு வருகிறார் என்றால் விஜய்க்கு தனுஷ்தான் போட்டியாக இருப்பார், நம்பர் இடத்திற்கு தனுஷ் போய்விடுவார். திமுக, அதிமுக இருக்காது.
இதை ஏன் சொல்கிறேன் என்றால், அவரது (தனுஷின்) ஜாதகத்தை நான் பார்த்திருக்கிறேன். அதனால் இதை சொல்கிறேன்" என்றார். இவர் எப்போது, எங்கு பேசினார் என்ற விவரங்கள் சரிவர தெரியவில்லை. வைரலாகி வரும் வீடியோவைும் தனிப்பட்ட முறையில் உறுதிசெய்யவில்லை.
தனுஷ் அரசியல் வருவாரா?
தனுஷ் சில நாள்களுக்கு முன்னர் தனது பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூரில் நடத்தப்பட்ட ரத்ததான நிகழ்வில் பங்கேற்றார். அந்நிகழ்வின் மேடையில் தனுஷ் பேசியவை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அவர் அரசியல் வருகைக்காகவே இவ்வாறு பேசுகிறார் என்றும் சமூக வலைதளங்களில் பலர் விவாதித்து வருவது குறிப்பிடத்தக்கது.
கழட்டிவிடப்படும் இந்திய அணி பயிற்சியாளர்கள்... தொடர் தோல்விக்கு பின் முக்கிய மாற்றம்
Mumbai, Maharashtra:India National Cricket Team Latest News : இந்திய அணி தொடர்ச்சியாக அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து நாடுகளில் டி20ஐ மற்றும் ஓடிஐ தொடர்களை இழந்துள்ளது. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது ஆறுதல் மட்டுமே...
இந்தச் சூழலில், இந்திய அணியின் தொடர் தோல்வியை அடுத்து முக்கிய பயிற்சியாளர் ஒருவர் தனது பொறுப்பில் இருந்து விலகி உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் ஒரு முன்னணி ஐபிஎல் அணிக்கு பயிற்சியாளராக சேர்ந்துள்ளார் எனவும் தகவல்கள் வருகின்றன.
மேலும் படிக்க | தோனியை ஓரங்கட்டினால் பயிற்சியாளராக வரேன்.. CSKக்கு 2 கண்டிஷன்களை போட்ட EX வீரர்
ரியான் டென் டோஷேட் ராஜினாமா
இந்திய அணியின் உதவி பயிற்சியாளரான ரியான் டென் டோஷேட் (Ryan Ten Doeschate) அவரது பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கேகேஆர் அணியில் அவர் பயிற்சியாளராக சேர்ந்துள்ளார் என தகவல்கள் கூறப்படுகிறது.
முன்னாள் நெதர்லாந்து அணி வீரரான ரியான் டென் டோஷேட், கௌதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றபோது இந்திய அணியில் இணைந்தார். கடந்த 2024ஆம் ஆண்டு ஜூலை மாதம் ரியான் டென் டோஷேட் இந்திய அணியில் இணைந்த நிலையில், 2026ஆம் ஆண்டு ஜூலை மாதத்துடன் அவரது ஒப்பந்தம் நிறைவடைந்தது. அதேபோல், பீல்டிங் பயிற்சியாளர் டி திலீப்பின் ஒப்பந்தமும் நீட்டிக்கப்படவில்லை.
தற்போதைய பயிற்சியாளர் குழு
தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் வந்தபோது அவருடன் பந்துவீச்சு பயிற்சியாளராக மார்னே மார்கல், உதவி பயிற்சியாளர்களாக அபிஷேக் நாயர் மற்றும் ரியான் டென் டோஷேட் ஆகியோரும் இந்திய அணியில் சேர்ந்தனர். பின்னர் பேட்டிங் பயிற்சியாளராக சிதான்ஷு கோடக் மற்றும் சுழற்பந்துவீச்சு பயிற்சியாளராக சாய்ராஜ் பஹூதுலே ஆகியோர் உள்ளனர்.
| பொறுப்பு | பயிற்சியாளர்கள் |
| தலைமை பயிற்சியாளர் | கௌதம் கம்பீர் |
| பேட்டிங் பயிற்சியாளர் | சிதான்ஷு கோடக் |
| பந்துவீச்சு பயிற்சியாளர் | மார்னே மார்கல் |
| சுழற்பந்துவீச்சு பயிற்சியாளர் | சாய்ராஜ் பஹூதுலே |
| பீல்டிங் பயிற்சியாளர் | டி திலீப் |
அபிஷேக் நாயர் போல்...
கடந்த 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அபிஷேக் நாயர் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார், தற்போது கேகேஆர் அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ளார். அதேபோல், ரியான் டென் டோஷேட் கேகேஆர் அணியின் பயிற்சியாளர் குழுவில் இணைவார் என தெரிகிறது.
ஏன் டென் டோஷேட், திலீப் நீக்கம்?
- தற்போதைய இந்திய அணியில் பீல்டிங் பயிற்சியாளராக டி திலீப் இருக்கிறார். திலீப் மற்றும் டென் டோஷேட் இந்திய அணியில் ஒரே வேலையைதான் செய்கிறார்கள் என பேச்சுக்கள் வந்தன.
- டோஷேட் மற்றும் திலீப் ஆகியோரின் ஒப்பந்தம் நிறைவடைந்துவிட்டது. இருவரின் ஒப்பந்தமும் நீட்டிக்கப்படவில்லை என பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா உறுதியாக தெரிவித்துள்ளார்.
Ryan Ten Doeschate and T Dilip's contracts with Indian team has ended, confirms BCCI secretary Devajit Saikia.
— Press Trust of India (@PTI_News) July 28, 2026
We are not giving any extension to either Ryan Ten Doeschate and T Dilip, BCCI secretary Devajit Saikia confirms to PTI.
BCCI is in talks with two or three names to… pic.twitter.com/Br2DJEEntU
- ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளராக இருந்த காலத்தில் இருந்து டி திலீப், இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளராக இருந்து வருகிறார்.
- சமீப காலமாக இந்திய அணியின் பீல்டிங் சற்று பின்னடைவை சந்தித்திருக்கிறது, பல புதிய வீரர்கள் அணிக்குள் வந்திருக்கிறார்கள்.
- எனவே, அவர்களை மேம்படுத்த புதிய பீல்டிங் பயிற்சியாளர் தேவை என பிசிசிஐ கருதியிருக்கலாம். இதனால், டென் டோஷ்டே மற்றும் திலீப் ஆகியோரின் ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டிருக்காது. இல்லையெனில், திலீப்பிற்கு பதில் வேறு பீல்டிங் பயிற்சியாளரையும் பிசிசிஐ விரைவில் நியமிக்கலாம்.
இந்திய அணியின் தற்போதைய நிலை
கௌதம் கம்பீர் பொறுப்பேற்ற பின்னர் இந்திய அணி 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி, 2026 ஐசிசி டி20 உலகக் கோப்பை என இரண்டு ஐசிசி கோப்பைகளை வென்றாலும், பல இருதரப்பு தொடர்களை இந்திய அணி இழந்திருக்கிறது. இந்திய அணி ஓடிஐ மற்றும் டி20ஐ தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது. டெஸ்டை பொறுத்தவரை 4ஆம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | இந்திய அணியில் முதல் வாய்ப்பு... அதுவும் 33 வயதில்... யார் இந்த சரண்ஷ் ஜெயின்?
தூத்துக்குடிக்கு புதிய முகவரி: ரூ.4,000 கோடி மெகா முதலீடு, எக்கச்சக்க வேலைவாய்ப்பு
Thoothukudi, Tamil Nadu:My Earth, My Duty: டெலிவரி பாய் டூ சுற்றுச்சூழல் மாற்றத்தின் நாயகன் - யார் இந்த சத்யம் தீட்சித்?
New Delhi, Delhi:உலக இயற்கை வள பாதுகாப்பு தினத்தை (World Nature Conservation Day) முன்னிட்டு, Zee மீடியாவின் 'என் பூமி, என் கடமை' (My Earth, My Duty) பிரச்சாரத்தின் முதல் செய்திக் கட்டுரை, தனது தனிப்பட்ட வாழ்க்கைச் சாவல்களைச சுற்றுச்சூழல் சேவைக்கான லட்சியமாக மாற்றிய சத்யம் தீட்சித் என்ற இளம் சுற்றுச்சூழல் மாற்றத்தின் நாயகனின் பயணத்தை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது.
யார் இந்த சத்யம் தீட்சித்?
எளிய குடும்பப் பின்னணியை கொண்டவர் சத்யம். சைக்கிள் ரிக்சா ஓட்டுநராக இருந்து காவலாளியாக பணியாற்றிய ஒருவரின் மகன் தான் சத்யம். வாடகை வீட்டில் வளர்ந்த அவர், குடும்ப பொருளாதாரத்திற்குத் தோள்கொடுக்க பள்ளிப் பருவத்திலேயே மோமோஸ் (Momos) விற்பனை செய்து சம்பாதிக்கத் தொடங்கினார்.
கொரோனா காலத்தில் நடந்த திருப்பம்
தொடர்ந்து சத்யம் கல்லூரி காலத்தில் டெலிவரி நிர்வாகியாகவும் பணியாற்றிய அனுபவம், அவருக்குள் பொறுப்புணர்வையும் சேவை மனப்பான்மையையும் ஆழமாக விதைத்தது. கொரோனா பேரிடர் காலம் அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது.
தனிநபர் முயற்சி டூ இயக்கத்தின் வளர்ச்சி
சத்யம் குடிமைப்பணி தேர்வுக்கு (UPSC Exam) தயாராக திட்டமிட்டிருந்தார். இதனால், தனது கவனத்தை சமூக பணிகளின் பக்கம் திருப்பினார். அதன் தொடர்ச்சியாக தூய்மை, கழிவு மேலாண்மை மற்றும் விழிப்புணர்வு ஆகியவற்றை மையமாக கொண்டு மக்கள் பங்கேற்புடன் கூடிய சுற்றுச்சூழல் இயக்கம் ஒன்றை ஒருங்கிணைத்தார்.
ஆரம்பத்தில் வெறும் சில தன்னார்வலர்களுடன் மட்டுமே தொடங்கப்பட்ட இந்த முயற்சி, இன்று 200-க்கும் மேற்பட்ட நகரங்களில் ஒரு மக்கள் இயக்கமாகப் பரவியுள்ளது. இந்த மக்கள் இயக்கம் பொது இடங்கள் மற்றும் ஆற்றங்கரைகளில் தொடர்ச்சியாக தூய்மைப் பணிகளை மேற்கொண்டு, பல டன் கழிவுகளை அகற்றி சாதனை படைத்து வருகின்றனர்.
இயக்கத்தின் முக்கிய வேலைகள்
மேலும், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் ஆன்மீக வழிபாட்டுக் கழிவுகளை மறுசுழற்சி முறையிலும், சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத வகையிலும் பாதுகாப்பாக மறுசெயலாக்கம் செய்து அகற்ற இந்த இயக்கத்தினர் ஊக்குவித்து வருகின்றனர்.
வெறும் தூய்மை பணிகளோடு நின்றுவிடாமல், விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் மற்றும் சமூகப் பங்கேற்பு மூலம் குடிமக்கள் அனைவரும் தங்கள் சுற்றுப்புறத்தை பராமரிப்பதில் உரிமையும் பொறுப்பும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற மாற்றத்தையும் இந்த இயக்கம் முன்னெடுத்து வருகிறது.
உண்மையான மாற்ற மலர...
ஒரு தனிநபரின் உறுதியான எண்ணம், ஒரு பெரும் மக்கள் இயக்கமாக எப்படி உருவெடுக்கும் என்பதைக் கொண்டாடும் வகையிலும்; "சாதாரண மனிதர்கள் தங்களைச் சுற்றியுள்ள உலகத்திற்குப் பொறுப்பேற்கத் தொடங்கும்போதே உண்மையான மாற்றம் மலரும்" என்ற 'என் பூமி, என் கடமை' பிரச்சாரத்தின் மையக் கருத்தைப் பிரதிபலிக்கும் வகையிலும் சத்யம் அவர்களின் சாதனைப் பயணம் அமைந்துள்ளது.
வெள்ளி வென்ற 'கோவில்பட்டி சிங்கம்' காமன்வெல்த்தில் அசத்திய முத்துப்பாண்டி ராஜா யார்?
Scotland:Commonwealth Games 2026, Who Is Muthupandi Raja : காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் ஸ்காட்லாந்து தலைநகர் கிளாஸ்கோவ் நகரில் நடைபெற்று வருகிறது. காமன்வெல்த் கேம்ஸ் சங்கத்தில் உறுப்பினராக உள்ள 74 தேசங்கள் மற்றும் பிரேதசங்கள் இத்தொடரில் பங்கேற்றுள்ளன.
தடகள மற்றும் பாரா தடகள வீரர்கள் 32 பேர் உள்பட மொத்தம் 122 இந்திய வீரர்கள் காமன்வெல்த் தொடரில் பங்கேற்றுள்ளனர்.
நேற்றைய தினம் பளு தூக்குதல் போட்டியில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுக்கான போட்டிகள் நடைபெற்றன. பளு தூக்குதல் போட்டியில் மட்டும் இந்தியா தற்போது மூன்று பதக்கங்க வென்றுள்ளது. பாரா பவர்லிஃப்டிங் போட்டியிலும் ஒரு பதக்கம் வென்றுள்ளது.
மேலும் படிக்க | Asian Games 2026: இந்தியா - பாகிஸ்தான் மோதும் வாய்ப்பு.. வெளியான அட்டவணை
| வீரர் | போட்டி | வென்ற பதக்கம் |
| ஜாந்து குமார் | ஆடவர் ஹெவிவெயிட் பாரா பவர்லிஃப்டிங் | வெண்கலம் |
| ரிஷிகாந்த சிங் | ஆடவர் 60 கிலோ பளு தூக்குதல் | வெள்ளி |
| மிராபாய் சானு | மகளிர் 48 கிலோ பளு தூக்குதல் | தங்கம் |
| முத்துபாண்டி ராஜா | ஆடவர் 65 கிலோ பளு தூக்குதல் | வெள்ளி |
286 கிலோவை தூக்கிய ராஜா
முத்துபாண்டி ராஜா என பார்த்ததும், அனைவருக்கும் புரிந்திருக்கும்... ஆம், அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்தான். பளு தூக்குதலில் Snatch முறையில் 126 கிலோ மற்றும் Clean and Jerk முறையில் 160 கிலோ என மொத்தம் 286 கிலோவை அவர் தூக்கினார்.
ஆனால், மலேசியாவின் அஸ்னில் பிடின் 299 கிலோவை தூக்கி தங்கப்பதக்கத்தை வெல்ல, முத்துபாண்டி ராஜா வெள்ளிப்பதக்கத்தை வென்று மிரட்டினார். முத்துப்பாண்டி ராஜா காமன்வெல்த் தொடர் வரை, கடினமான போராட்டத்தை நினைவுக்கூர்வதன் மூலம், அவர் கடந்த வந்த பாதையை புரிந்துகொள்ளலாம்.
|| #IndiaAtCWG
— All India Radio News (@airnewsalerts) July 27, 2026
n tsgold with a Games… pic.twitter.com/6dpjTYUOep
முத்துப்பாண்டி ராஜா கடந்து வந்த பாதை
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் முத்துப்பாண்டி ராஜாவுக்கு, பளு தூக்குதல் மேடையில் Snatch முறையில் தூக்கும்போது அவரது வலது பெருவிரலில் காயம் ஏற்பட்டது.
காயம் ஏற்பட்டபோது தேசிய முகாமில் அவர் இருந்தார், காயத்திற்கு பின் ராஜாவின் வலது முழங்கையும் கடினமாக வலிக்கத் தொடங்கியிருக்கிறது. பின்னர் புனேவுக்குச் சென்று வல்லுநர்களை சந்தித்தபோது அவர்தான் அறுவை சிகிச்சையை பரிந்துரைத்துள்ளார்.
ஏற்கெனவே 2019ஆம் ஆண்டில் ராஜா தனது அவரது இடது முழங்கையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்தார். காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டியில் Snatch முறையில் 123 கிலோவை தூக்க முயன்றபோது, இடது முழங்கையில் தசைநார் கிழிவு நேர்ந்தது. அதில் குணமடைந்து வரவே 2 ஆண்டுகள் ஆனது.
மீண்டு வந்த முத்துப்பாண்டி ராஜா
அப்படியிருக்க ராஜா மீண்டும் அதேபோல் ஒரு போராட்டத்தை சந்திக்க வேண்டாம் என நினைத்தார். அடுத்து 2022 காமன்வெல்த் போட்டிக்கான தகுதிச்சுற்று போட்டிகளும் நடக்க இருந்தன.
2021 தேசிய சாம்பியன்ஷிப்பில் 3ஆம் இடத்தை பிடித்து, காமன்வெல்த் தகுதிச்சுற்றில் பங்கேற்க இருந்தார். ஆனால், காயம் காரணமாக அதையும் அவர் தவறவிட நேர்ந்தது. தற்போது மீண்டும் அந்த போராட்டங்களை கடந்து 2026ஆம் ஆண்டில் வெள்ளிப் பதக்கத்தை வென்று அசத்தியிருக்கிறார்.
மூன்று அறுவை சிகிச்சைகள்
2019ஆம் ஆண்டில் இருந்து 2025ஆம் ஆண்டு வரை மட்டும் மூன்று அறுவை சிகிச்சைகளை ராஜா எதிர்கொண்டிருக்கிறார். இந்த காலகட்டத்தில் கடுமையான உடல்நலப் பிரச்னைகளையும் அவர் கடந்து வந்திருக்கிறார். இரண்டு முறை டெங்கு மற்றும் ஒரு மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருக்கிறார். மஞ்சள் காமாலையால் கடுமையாக உடல் எடையையும் இழந்துள்ளார்.
யார் இந்த முத்துப்பாண்டி ராஜா?
- 26 வயதான முத்துப்பாண்டி ராஜா தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர். அவரின் தந்தை தீப்பட்டித் தொழிற்சாலையில் கூலி தொழிலாளியாக பணியாற்றுகிறார், தாயார் ஒரு இனிப்பு கடையில் துப்புரவு பணியாளராக உள்ளார்.
- இவரின் மூத்த சகோதாரும் பளு தூக்குதல் வீரர் ஆவார். ஆனால், விளையாட்டு கைவிட்டுவிட்டு தற்போது தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.
- ராஜாவின் தற்போது சென்னையில் இந்தியன் ரயில்வேயில் மின்சாரத்துறையில் பணியாற்றி வருகிறார்.
முத்துப்பாண்டி ராஜா தற்போது காமன்வெல்த் போட்டிகளில் பதக்கத்தை பெற்றதை நிச்சயம் ஒலிம்பிக்கிலும் பதக்கம் வென்று ஒட்டுமொத்த நாட்டையும் பெருமையில் ஆழ்த்துவார் என எதிர்பார்க்கலாம்.
பளு தூக்குதலில் இதுவரை கர்ணம் மல்லேஸ்வரி, மிராபாய் சானு ஆகியோர் மட்டுமே பதக்கம் வென்றுள்ளனர், ஆடவர் பிரிவில் யாருமே பதக்கம் வென்றதில்லை. எனவே, நம் கோவில்பட்டி முத்துபாண்டி ராஜா நிச்சயம் முதல் இந்தியராக அந்த பெருமையை பெருவார் என எதிர்பார்க்கலாம்.
ஜூலை 31 முதல் கோழிக்கறி விற்பனை நிறுத்தம்! அப்போ சிக்கனுக்கு எங்கே போறது..?
Thanjavur, Tamil Nadu:ஜூலை 31ஆம் தேதி முதல், தமிழ்நாடு, புதுச்சேரியில், காலவரையற்ற கடையடைப்பு மற்றும் வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக, தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பு அறிவித்திருக்கிறது. கறிக்கோழிகளுக்கு, தீவன கட்டுபாடு தொடர்பாக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக அமல்படுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனை கண்டித்துதான் கடையடைப்பு போராட்டம் நடைபெற இருக்கிறது. இந்த காரணத்தால், தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட இரு மாநிலங்களிலும் கோழிக்கறி தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பிருப்பதாக வணிகர்கள் தெரிவிக்கின்றனர்.
செயற்குழுக்கூட்டம்:
அரசின் இந்த அறிவிப்பு தொடர்பாக, தஞ்சாவூரில் தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பின் மாநில அவசர செயற்குழுக்கூட்டம் நடைபெற்றிருக்கிறது. இதில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான கோழி விற்கும் வணிகர்கள் பங்கேற்று ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில், கறிக்கோழிகளுக்கான தீவனக்கட்டுப்பாடு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை அஎரசு அனைத்து மண்டல மற்றும் மாவட்ட கால்நடைதுறை அதிகாரிகளுக்கும் தெளிவாக அறிவுறுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருக்கிறது. இதையடுத்து, விற்பனைக்காக அனுப்பப்படும் கறிக்கோழிகளுக்கு, குறைந்தது, 15 மணி நேரத்திற்கு முன்பாகவே தீவனம் வழங்குவதை நிறுத்த வேண்டுமென நடைமுறையை கோழி உற்பத்தியாளர்கள் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இந்த கூட்டத்தில் மாநில தலைவர் துரைராஜ், செயலாளர் சுந்தரலிங்கம், பொருளாளர் ஜான் கென்னடி மற்றும் தமிழ்நாடு, புதுச்சேரி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். இவர்களை தாண்டி, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான கோழி வணிகர்களும் கலந்து கொண்டனர்.
வணிகர்கள் கூறுவது என்ன?
வணிகர்கள் இந்த பிரச்னை குறித்து பேசினர். அப்போது, விற்பனைக்கு முன்பாகவே கோழிகளுக்கு தொடர்ந்து தீவனம் வழங்குவதால், அவற்றின் எடை செயற்கையாக அதிகரிக்கிறது. மேலும், செரிமானம் ஆகாத தீவனக்கழிவுகள் வெளியேறுவதால், சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுவதுடன், சுகாதாரப்பிரச்னைகளும் உருவாகும் அபாயம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பேசிய கோழி வணிகர்கள் கூட்டமைப்பின் மாநில தலைவர் துரைராஜ் செய்தியாளர்களிடம் பேசினார். தீவனக்கட்டுப்பாடு, அந்த நெறிமுறைகளை பின்பற்றாததால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து பேசிய அவர், இதில் பொருளாதாரம் மறைந்திருப்பதாகவும், கோழிகளுக்கு கடைசி வரை தீவனம் கொடுத்தால் அதன் எடை அதிகமாகி கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய முடியும் என்று யோசிப்பதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.
இதை வலியுறுத்திதான், வரும் 31ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மாநிலம் தழுவிய காலவரையற்ற கடையடைப்பு மற்றும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதற்கு முடிவு செய்திருப்பதாக கூறிய அவர், மேற்குறிப்பிட்ட நாளில் இரு மாநிலங்களிலும் கோழிக்கரி விற்பணை நிறுத்தப்படும் என்று தெரிவித்தார். இந்த போராட்ட அறிவிப்பால், தமிழ்நாடு முழுவதம் இருக்கும் ஒரு லட்சம் கோழிக்கறி கடைகள் மூடப்படும் என கூறப்படுகிறது.
கறிக்கு எங்கே போறது? கவலையில் மக்கள்!
நம் ஊரை பொறுத்தவரை, கோழிக்கறியை விரும்பி சாப்பிடுபவர்கள் பல லட்சம் பேர் இருக்கின்றனர். ஒரு சிலருக்கு கறி இல்லை என்றால் அன்றைய தினத்தில் உணவே இறங்காது. ஆட்டிறைச்சியின் விலை அதிகம் என்பதால், கோழிக்கறியை பல்வேறு இல்லங்களில் அடிக்கடி செய்வர். அப்படி இருக்கையில், வரும் 31ஆம் தேதி கோழிக்கறி விற்கப்படாது என்று அறிவிப்பு வெளியாகி இருப்பது பொது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதே நிலை தொடருமா, அல்லது அன்று ஒரு நாள் மட்டும் இந்த நிலையா என்பது அவர்களின் கேள்வியாக இருக்கிறது.
மேலும் படிக்க | மயிலாடுதுறை: ரூ.3,000 தரும் தமிழக அரசு.. யாரெல்லாம் பெறலாம்? வெளியான அறிவிப்பு!
2 நாள் சாப்பிடவே இல்லை... தங்கம் வென்ற பின் மிராபாய் சானு - காமன்வெல்த்தில் ஹாட்ரிக் இது!
Scotland:Mirabai Chanu Gold Medal, Commonwealth Games 2026 : ஸ்காட்லாந்து நாட்டில் கிளாஸ்கோவ் நகரில் 2026 காம்ன்வேல்த் கேம்ஸ் - விளையாட்டுத் தொடர் கடந்த ஜூலை 23ஆம் தேதி அன்று நடைபெற்று வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா விளையாட்டு போட்டிகளும் நடைபெற்று வருகின்றன. மொத்தம் 10 விளையாட்டுகள் நடைபெறுகின்றன.
இந்நிலையில், நேற்றிரவு (ஜூலை 26) நடந்த மகளிருக்கான பளு தூக்குதல் போட்டியில் 48 கிலோ பிரிவில் இந்தியாவின் பளு தூக்குதல் சூப்பர்ஸ்டார் அறியப்படும் சைக்கோம் மிராபாய் சானு தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
I am pleased with my performance and truly humbled to win my third consecutive Commonwealth Games gold medal at Glasgow. This being my fourth CWG appearance makes this achievement even more special.
— Saikhom Mirabai Chanu (@mirabai_chanu) July 26, 2026
I would like to thank everyone for your unwavering support.
pic.twitter.com/YfpWAzYDsm
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் காமன்வெல்த் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில், மகளிர் பளு தூக்குதல் பிரிவில் தொடர்ந்து மூன்று முறை தங்கப்பதக்கத்தை வென்று மிராபாய் சானு சாதனை படைத்திருக்கிறார்.
Kargil War Explainer : பாகிஸ்தான் சதியை அம்பலப்படுத்திய போன் கால்... இந்தியாவின் மாஸ்டர் பிளான்
New Delhi, Delhi:Kargil War 1999 Explainer : 1999ஆம் ஆண்டு மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை 'கார்கில் போர்' நடைபெற்றது. முன்னதாக, 1998ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகளுமே அணு ஆயுத சோதனையை மேற்கொண்டது. இது பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை உண்டாக்கியது. பதற்றத்தை தணிக்கவும் இரு நாடுகள் பல முன்னெடுப்புகளை முயற்சித்தன.
அப்போது இந்திய பிரதமராக இருந்த அடல் பிஹாரி வாஜ்பாய் லாகூர் பஸ் டூர் சென்றார். 1999ஆம் ஆண்டு பிப். 21ஆம் தேதி இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கும் இடையே அமைதியை ஏற்படுத்த 'லாகூர் பிரகடனம்' என்ற ஒப்பந்தம் கையெழுத்தானது. வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தில் வாஜ்பாய் மற்றும் அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆகியோர் கையெழுத்திட்டனர்
ஆனால் மறுபக்கம், அதே பிப்ரவரி மாதத்தில் அப்போதைய பாகிஸ்தான் ராணுவ தளபதி பர்வேஸ் முஷாரப் இந்தியா மீதான தாக்குதலுக்கு தயாராகி வந்தார். பர்வேஸ் முஷாரப்பின் நடவடிக்கைகள்தான் கார்கில் போருக்கு தொடக்கப் புள்ளியாக அமைந்தது.

மேலும் படிக்க | 1947 போர் முதல் ஆபரேஷன் சிந்தூர் வரை: IND vs PAK மோதல் வரலாறு - ஒரு பார்வை
பாகிஸ்தான் போட்ட சதித்திட்டம்
பனிக்காலத்தில், கார்கில் பகுதியில் மைனஸ் 40 டிகிரி குளிர் இருக்கும். இந்த கடுமையான குளிர் காரணமாக, இந்தியா - பாகிஸ்தான் படை வீரர்களுக்கு மத்தயில் ஒரு புரிதல் நிலவி வந்தது. அதாவது, பனிக்காலத்தில் அந்த எல்லையை விட்டு இரு நாட்டு வீரர்களும் சென்றுவிடுவார்கள். கோடை வருவதற்கு முன் மீண்டும் அங்கு திரும்பி வருவார்கள்.
ஆனால், 1999ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாகிஸ்தான் படை இதில் தில்லுமுல்லு செய்ய துணிந்தது. படை வீரர்களாக இல்லாமல் பயங்கரவாதிகள் போல் வேடமிட்டு, காலியாக கிடந்த இந்திய ராணுவத்தின் முகாம்களுக்குள் போல் அத்துமீறி நுழைந்தனர். அங்கிருந்து அவர்கள் இந்திய வீரர்களுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டினர்.
ஸ்ரீநகர் - லே பகுதிகளை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 1A வழியாகச் செல்லும் இந்திய வீரர்களை தாக்கி, லடாக்கை இந்தியாவில் இருந்து பிரிப்பதே அவர்களின் திட்டமாக இருந்தது. அதாவது, 1971 போரில் இந்தியாவிடம் ஏற்பட்ட தோல்விக்கு பழிவாங்கும் விதத்தில், சியாச்சின் பனியாறு பகுதியை கைப்பற்றுவதே அவர்களின் நோக்கம்.
ஆப்ரேஷன் விஜய் தொடங்கியது
ஆனால், பாகிஸ்தானியர்கள் கார்கில் மலைப் பகுதிகளில் ஊடுருவியிருக்கிறார்கள் என்பது ஆடு மேய்ப்பவர்களின் மூலம் இந்திய ராணுவத்திற்கு மே மாதத்தில் தகவல் கிடைத்துள்ளது. உடனே இந்திய பிரதேசத்தில் அத்துமீறி நுழைந்திருக்கும் எதிரிகளை விரட்டியடிக்க 'ஆப்ரேஷன் விஜய்' நடவடிக்கையை இந்திய ராணுவம் தொடங்கியது. மே 10ஆம் தேதி இந்த நடவடிக்கை தொடங்கியது.
| தேதி | முக்கிய நிகழ்வு |
| பிப்., 1999 | பாகிஸ்தானிய படைகள் எல்லை கடந்த இந்திய முகாம்களை ஆக்கிரமித்தது. |
| மே 3, 1999 | உள்ளூர் ஆடு மேய்ப்பவர் ஊடுருவல்காரர்களை கண்டு, இந்தியாவுக்கு தகவல் அளித்தார். |
| மே 5, 1999 | இந்திய ராணுவம் அந்த பகுதியை ஆய்வு செய்ய ஒரு படைப்பிரிவை அனுப்பியது, இவர்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. |
| மே 10, 1999 | கார்கில் மலையை கைப்பற்ற ஆப்ரேஷன் விஜய் நடவடிக்கை தொடங்கியது. |
மேலும் படிக்க | கார்கில் நாயகர்கள்! போரில் உயிர் தியாகம் செய்த ஹீரோக்கள் யார்?
இந்தியாவுக்கு இருந்த சிக்கல்கள்
போர் களமே கடுமையானது. ஆனால், இப்போது கடல் மட்டத்தில் இருந்து 18,000 அடி உயரம், மைனஸ் டிகிரி குளிர், எதிரிகளின் அதிரடி தாக்குதல் என அனைத்தும் இந்தியாவுக்கு கடினமானச் சூழலை கொடுத்தது.
ஆனால் இந்திய ராணுவம் மிகுந்த துணிச்சலுடன், தைரியத்துடன் டைகர் ஹில், டோலோலிங் போன்ற சிகரங்களை கைப்பற்றியது. இந்தியாவின் போஃபர்ஸ் தூப்பாக்கிகளும், மிராஜ் போர் விமானங்களும் எதிரிகளை பீதியடையச் செய்தன.
ஆதரவளிக்காத அமெரிக்கா
அந்த சமயத்திலும் அமெரிக்கா GPS டேட்டாவை இந்தியாவுக்கு தர மறுத்தது. இதனால், இந்திய ராணுவத்திற்கு எதிரிகளின் முகாம்களை கண்டறிவது கடினமாக இருந்தது. தாக்குதலும் இதனால் துல்லியமாக இல்லை. ஆரம்ப கட்டத்தில், பல ராணுவ வீரர்கள் உயிர் தியாகம் செய்ய வேண்டியிருந்தது.
பாகிஸ்தான் வீரர்கள் ஏற்கெனவே உயரமான இடங்களை ஆக்கிரமித்திருந்ததால், அவர்களுக்கு இந்திய வீரர்கள் மீதான தாக்குதல் எளிதாகவே இருந்தது.
இந்திய ராணுவத்துடன், விமானப் படை கைக்கோர்த்த பின்னர் பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இந்திய ராணுவத்தினர் கூட எதிர்பார்க்காத வழிகளில் கயிறுகள் மூலம் மலையேறி, இரவில் எதிரி முகாம்கள் மீது மின்னல் வேக தாக்குதல் நடத்தி பாகிஸ்தானை அச்சுறுத்தியது.
தொலைப்பேசி உரையாடல் பதிவு
இந்த போர் நிறுத்துவதற்கும் முக்கியமான புள்ளியாக அமைந்தது, முஷாரபின் ஒரு போன் கால்தான். கார்கில் போர் நேரத்தில், முஷாரப் சீனாவுக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்தார்.
அங்கிருந்து பாகிஸ்தான் ராணுவத்தின் முக்கிய அதிகாரியான அஜீஸ் கான் என்பவருடன் சாட்டிலைட் போன் மூலம் உரையாடியிருக்கிறார். இந்த உரையாடல்களை இந்தியாவின் உளவு அமைப்பான R&AW துல்லியமாக பதிவு செய்தது.

மே 26 மற்றும் மே 29 ஆகிய தேதிகளில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு அழைப்பை பதிவு செய்யப்பட்டது. அப்போது R&AW அமைப்பின் தலைவர் அரவிந்த் டேவ், முஷாரப் - அஜீஸ் கான் இடையேயான இரண்டு தொலைப்பேசி உரையாடல்களை பிரதமர் வாஜ்பாயிடம் கொண்டுவந்தார்.
கார்கில் போரில் சண்டையிட்டு வருபவர்கள் பயங்கரவாதிகள் அல்ல, பாகிஸ்தான் ராணுவத்தின் வடக்கு காலாட்படை வீரர்கள் என்பது பாகிஸ்தான் ராணுவத் தளபதியான முஷாரப்பின் பேச்சின் மூலம் அம்பலமாகிவிட்டது. முஜாஹிதீன்களின் பங்கு இதில் மிகக் குறைவு என்பதும் தெரிந்தது.
மேலும் படிக்க | கார்கில் போரின் நாயகன்.. யார் இந்த மேஜர் சரவணன் மாரியப்பன்? தமிழக வீரரின் கதை
பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட நெருக்கடி
அதுவரை கார்கில் போருக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்றும் இது பயங்கரவாதிகளின் தாக்குதல் என்றும் பாகிஸ்தான் அரசு தெரிவித்து வந்தது.
பர்வேஸ் முஷாரப்பின் இந்த தொலைபேசி உரையாடல் பதிவுகள் ஜூன் 11ஆம் தேதி ஊடகங்களில் வெளியான பின்னர், பாகிஸ்தானுக்கு சிக்கல் தொடங்கியது.
சீனா பாகிஸ்தானுக்கு ஆதரவளிக்க மறுத்தது. ஆரம்பத்தில் இருந்து GPS டேட்டாவை இந்தியாவுக்கு கொடுக்க மறுத்த அமெரிக்கா, போரை நிறுத்த முக்கிய பங்கை செலுத்தியது.
RA&W பதிவு செய்து பிரதமரிடம் கொடுத்த தொலைப்பேசி உரையாடல்கள் குறித்து இந்த தகவல்கள் வாஜ்பாயின் தனிச் செயலாளராக பல ஆண்டுகள் பணியாற்றிய முன்னாள் அரசு உயர் அதிகாரி சக்தி சின்ஹா எழுதிய "Vajpayee: The Years That Changed India" (2020) புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. கார்கில் போர் நடந்த நேரத்திலும் சக்தி சின்ஹா பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றியிருக்கிறார்.
நவாஸ் ஷெரீப்புக்கு எப்போது தெரிந்தது?
இவை ஒருபுறம் இருக்க, நவாஸ் ஷெரீப்பிற்கு, முஷாரப்பின் நடவடிக்கை எப்போது தெரிந்தது என்பதிலும் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன.
இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கை குறித்து பிரதமர் நவாஸ் ஷெரீப் உடன் பகிர்ந்துகொண்டதாக முஷாரப் அவரது 'In The Line Of Fire' என்ற புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், நவாஸ் ஷெரீப் சார்ந்த பாகிஸ்தான் முஸ்லீம் லீக் - PML(N) கட்சி வெளியிட்ட Fact Sheet எனும் அறிக்கையில், கார்கில் தாக்குதல் குறித்து முஷாரப் மே மாதம் தகவல் தெரிவித்திருக்கிறார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய ராணுவம் இதில் தலையிட்ட பின்னரே முஷாரப், நவாஸ் ஷெரீப்பிடம் மே 17ஆம் தகவல் தெரிவித்திருக்கிறார். அதுவும் முழுமையாக சொல்லப்படவில்லை என்றும் Fact Sheet குறித்து விவரித்து பேசிய PML(N) கட்சியின் செயலாளர் அஷான் இக்பால் தெரிவித்திருந்தார்.
அதாவது, பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ராணுவம் போர் தொடுத்ததால், அதற்கு பயந்துதான் முஷாரப் நவாஸ் ஷெரீப்பிடம் தகவல் தெரிவித்தாகவும் கூறியிருக்கிறார்.
கிளிண்டன் கொடுத்த உளவுத்துறை ரிப்போர்ட்
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஜூலை 4ஆம் தேதி அன்று அமெரிக்கா சுற்றுப்பயணம் செந்றிருந்தார். அப்போது அமெரிக்க அதிபராக இருந்து கிளிண்டன், உளவுத்துறை ரிப்போர்ட்களை ஷெரீப்பிடம் கொடுத்தார். இந்தியாவை தாக்க பாகிஸ்தான் ராணுவ அணு ஆயுத ஏவுகணைகளை தயாரித்து வருவதாக அறிக்கையில் இருந்தது, இது ஷெரீப்பை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
போர் முடிந்தது எப்படி?
எனவே, நிபந்தனையின் உடனடியாக போரை நிறுத்த வேண்டும் அல்லது கடுமையான பொருளாதார தடைகள் பாகிஸ்தான் மீது விதிக்கப்படும் என கிளிண்டன் எச்சரித்தார் என கூறப்படுகிறது. அடுத்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் ஈடுபட்டது. தொடர்ந்து, 1999ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் தேதி போர் முடிவுக்கு வந்தது.
527 இந்திய வீரர்கள் வீரமரணம்
இந்திய தரப்பு: ஆப்ரேஷன் விஜய் நடவடிக்கையில் சுமார் 527 இந்திய படை வீரர்கள் உயிரிழந்ததாக அரசு ஆணவங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1,363 வீரர்கள் காயமடைந்துள்ளனர். இந்த போரில் இருந்து முக்கிய பாடமாக GPS டேட்டாவுக்கு அமெரிக்காவை சார்ந்திருக்காமல், இந்தியா தனது செயற்கைக்கோள் வழிசெலுத்தல் அமைப்பை நிறுவியது.
On Kargil Vijay Diwas, our nation expresses gratitude to the brave soldiers for their extraordinary courage and commitment towards securing India. Their valour in the face of the most formidable conditions will forever remain a source of national pride. Their unwavering…
— Narendra Modi (@narendramodi) July 26, 2026
பாகிஸ்தான் தரப்பு: 1999 போரில் பாகிஸ்தான் படைவீரர்கள் 453 பேர் உயரிழந்ததாக அந்நாடு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால், இந்தியா மற்றும் சுயாதீனமாக ஆய்வுமேற்கொண்டவர்கள் படைவீரர்கள் மற்றும் ஒழுங்கற்ற துணை ராணுவ படைவீரர்கள் என 700 முதல் 4000 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என கணக்கிட்டனர்.
தர்மேந்திர பிரதான் ராஜினாமா... மாணவர்கள் போராட்டம் மாபெரும் வெற்றி
New Delhi, Delhi:Education Minister Dharmendra Pradhan Resignation : டெல்லியில் மாணவர்களின் தீவிரமான போராட்டத்தின் பலனாக, நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
Union Education Minister Dharmendra Pradhan resigns.
— ANI (@ANI) July 25, 2026
"...To ensure that anti-national elements are not benefitted by the situation at Jantar Mantar and across the country, that the nation remains united, students in India do not get tangled in legal complexities and focus on… https://t.co/sbtiMMhrgp pic.twitter.com/DPdZwn8q7i
மோடி அரசை அசைத்து பார்த்த Gen Z படை... 12 ஆண்டுகளில் முதல் ராஜினாமா
New Delhi, Delhi:Dharmendra Pradhan Resignation : பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 12 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி செய்து வருகிறது. பல்வேறு அமைச்சரவை மாற்றங்களை கடந்த 12 ஆண்டுகளில் பாஜக பார்த்திருந்தாலும், மக்களின் போராட்டம் காரணமாக இதுவரை எந்த அமைச்சரும் ராஜினாமா செய்ததில்லை.
பிரதமர் மோடி தலைமையிலான 12 ஆண்டுகால ஆட்சியில் உள்ள பல அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் இதற்கு முன்பும் எழுந்துள்ளன. ஆனால், பாஜக பொதுவாக அத்தகைய கோரிக்கைகளைப் புறக்கணித்தபடியே தனது அமைச்சர்களுக்கு ஆதரவாக நின்றுள்ளது.
போராட்டங்களும்... பதவி விலகாத அமைச்சர்களும்...
அந்த வகையில், இதற்கு முன் பிரதமர் மோடி ஆட்சியில் எழுந்த தீவிர போராட்டங்கள் நடந்தும் பதவி விலகாத அமைச்சர்கள் குறித்து இங்கு காணலாம்.
- கொரோனா பெருந்தொற்று காலத்தில் சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
- எப்ஸ்டீன் பைல்ஸ் விவகாரத்துக்குப் பிறகு மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.
- மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டத்தின் போது நரேந்திர சிங் தோமரையும் பதவி விலக கோரப்பட்டது.
- நாடு முழுவதும் ஏராளமான ரயில் விபத்துக்குப் பிறகும் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன.
எம்.ஜே. அக்பர் விதிவிலக்கு
ஆனால் இவர்கள் யாரும் உடனடியாக பதவி விலகவில்லை. மோடி தலைமையிலான அரசு அரசியல் அழுத்தத்திற்கு பணியத் தயாராக இல்லை என்ற பேசப்பட்டு வந்தது.
இதுவரை மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் தவிர, தார்மிகப் பொறுப்பை ஏற்று பதவி விலகிய அமைச்சர்கள் யாருமில்லை. பாஜகவை சேர்ந்த இணையமைச்சர் எம்.ஜே அக்பர் மீது 20 பெண் ஊடகவியலாளர்கள் பாலியல் புகார் அளித்து இருக்கிறார்கள்.
இது பாஜக கட்சிக்கு பெரிய சிக்கலை உண்டாக்கிய நிலையில் 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பதவி விலகினார். அமைச்சரவை மாற்றத்தில் நீக்கப்பட்டவர்கள், தனிப்பட்ட காரணங்களாக விலகியவர்கள் வேறு கதை.
தர்மேந்திர பிரதான் ராஜினாமா
ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான 12 ஆண்டுகால ஆட்சியில் முதல்முறையாக முழு மக்கள் போராட்டத்தால் ஒரு மத்திய அமைச்சர் பதவி விலகி உள்ளார்.
நாடு தழுவிய அளவில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் தொடர் போராட்டம் காரணமாக, நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
நீட் போராட்டத்தில் அமைச்சரில் மகள்... பிரதமருக்கு எதிராக கோஷம் - ஷாக் ஆகும் பாஜக
Guwahati, Assam:NEET Paper Leak Protest : டெல்லியில் மாணவர் போராட்டம் அன்றாடம் தீவிரமடைந்து வருகிறது. காக்ரோச் ஜனதா கட்சி என்ற பெயரில் பெருந்திரளான இளைஞர்கள், மாணவர்கள் நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என தொடர்ச்சியாக போராடி வருகின்றனர்.
டெல்லியில் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாணவர் போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டை பொருத்தவரை, சென்னையில் நீட் தடைக் கோரி போராட்டம் நடைபெறுகிறது.
அரசு தரப்பில் சொல்வது என்ன?
காக்ரோச் ஜனதா கட்சி ஆதரவாளர்கள் மட்டுமின்றி இடதுசாரி மாணவ அமைப்பினர், காங்கிரஸ் மாணவ அமைப்பினர் என பல்வேறு மாணவ அமைப்பினரும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
டெல்லியில் போராட்டக்காரர்களின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள், தண்டனைகள், கட்டுப்பாடுகள் உள்ளிட்டவை சீர்திருத்தங்கள் அடங்கிய சட்ட மசோதாவை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் 2வது வாரத்தில் தாக்கல் செய்ய இருப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
உறுதியாக நிற்கும் மாணவர்கள்
ஆனால், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்வது மட்டுமே போராட்டத்திற்கான தீர்வாக இருக்கும் என டெல்லியில் மாணவர்கள் உறுதிபட உள்ளனர். ஒருவேளை தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தாலும், தமிழகத்தில் போராடும் மாணவர்களின் முடிவு என்னவாக இருக்கும் என்பதும் சரிவர தெரியவில்லை.
அசாமிலும் நடக்கும் போராட்டம்
இந்தச் சூழலில், மாணவர்கள் போராட்டம் பாஜக ஆளும் அசாம் மாநிலத்திலும் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது. அசாம் தலைநகர் கௌகாத்தியில் உள்ள சாச்சல் எனும் பகுதியில் நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாகவும் உள்ளது.
போராட்டத்தில் அமைச்சர் மகள்
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இந்த போராட்டத்தில் பாஜக அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் அமைச்சர் கேஷப் மஹந்தா என்பவரின் மகள் திபிஷா மஹந்தாவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவரின் போராட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராகவும் தொடர்ந்து கோஷம் எழுப்பியதையும் வைரலாகும் அந்த வீடியோவில் காண முடிகிறது.
பதாகைகளை ஏந்தி, கோஷமிட்டு மாணவர்களுடன் மாணவராக திபிஷா போராடி வருகிறார். மத்திய அரசு இந்த நீட் தேர்வு முறைக்கேட்டுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் முறைகேடுகளை களைய நடவடிக்கை என்றும் திபிஷா கோரிக்கை வைத்துள்ளார்.
யார் இந்த கேஷப் மஹந்தா?
திபிஷாவின் தந்தை கேஷப் மஹந்தா அசாம் மாநிலத்தில் அசோம் கண பரிஷத் கட்சியின் மூத்த தலைவர் ஆவார். அதாவது அக்கட்சியின் மாநிலத் தலைவர் அதுல் போராவிற்கு பிறகு மூத்த தலைவராக கேஷப் மஹந்தா அறியப்படுகிறார். பாஜக தலைமையிலான கூட்டணி அரசில் அசோம் கண பரிஷத் கட்சியும் உள்ளது. 2016ஆம் ஆண்டில் இருந்து பாஜக அரசில் கேஷப் அமைச்சராக இருந்து வருகிறார்.
அசாம் அரசின் மூத்த அமைச்சரின் மகளே, இதுபோன்ற கூட்டணிக்கு தலைமை வகிக்கும் பாஜகவுக்கு எதிராக போராட்டம் நடத்துவதும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
அசாம் முதல்வர் சொன்னது என்ன?
மாணவர்களின் போராட்டம் என்பது அவர்களின் உரிமை என்றும் செய்தியாளர் சந்திப்பில் அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். "இது மாணவர் போராட்டம். அவர்களின் கோரிக்கையையும், வாதங்களையும் ஏற்கிறோம். இந்த பிரச்னை குறித்து பிரதமர் உற்றுநோக்கி வருகிறார்.
ஆனால், அதேநேரத்தில் அசாம் மாநிலம் ஒரு முக்கியமான கட்டத்தில் இருக்கிறது. ஏனென்றால் அசாம் மாநிலத்தை வெள்ளம் கடுமையாக பாதித்துள்ளது. எனவே, இயற்கை பேரிடரில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என்றார். அசாமில் போராட்டம் அமைதியாக நடைபெற்று வருகிறது. நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக மட்டுமே போராட்டங்களில் கோஷம் எழுப்பப்படுகிறது.
மேலும் படிக்க | 'இளைஞர்களுக்கு நன்றி...' பிரதமர் மோடி இன்ஸ்டாவில் போட்ட வீடியோ - பேசியது என்ன?
