icon-pinewzicon-zee
PINEWZ
become creator
Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Pinewz
623527
LINGESHWARANLINGESHWARANFollow22 Aug 2024, 11:44 am

பாம்பன் பஸ் பாலத்தின் மைய இணைப்பு சேதமடைந்துள்ளது

Ramanathapuram, Tamil Nadu:

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம்-ராமேஸ்வரம் தீவு பகுதியில் கடலை இணைக்கும் வகையில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் ஸ்திரத்தன்மைக்காக, மத்திய பகுதியில் இரும்பு சட்டங்கள் நிறுவப்பட்டுள்ளன. இவ்வழியாக கனரக வாகனங்கள் செல்வதால், இரும்பு சட்டத்தை இணைக்கும் ஆணிகள் வெளியே வந்தன. இவ்வழியாக செல்லும் வாகனங்களின் டயர்கள் பழுதடைந்து விபத்து அபாயம் உள்ளது. இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பாலத்தை சீரமைக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0
0
Report

हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|

விஜய் vs தனுஷ்: 2031 தேர்தலில் திமுக, அதிமுகவே இருக்காது - ஜோதிடர் ரதன் பண்டிட் கணிப்பு

Chennai, Tamil Nadu:

Dhanush Political Entry : 1967, 1977 சட்டப்பேரவை தேர்தல்களை போன்று 2026 சட்டப்பேரவை தேர்தலும் தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் மிக முக்கிய இடத்தை பிடித்துள்ளது. 2024ஆம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்கப்பட்ட ஒரு கட்சி, அடுத்த 2 ஆண்டுகளில், அதாவது 2026ஆம் மே மாதம் ஆட்சியை பிடிக்கிறது. தவெகவின் இந்த அசாத்திய வெற்றிக்கு 'விஜய்' என்ற ஒற்றை மந்திரமே காரணம்.

முதலமைச்சர் விஜய்யின் தவெகவுக்கு 108 இடங்களே கிடைத்தாலும், கடந்த அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டை ஆட்சி செய்துவந்த திமுக மற்றும் அதிமுக முறையே இரண்டாவது, மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டன. கூட்டணி கட்சிகளை சேர்க்காமல் திமுக 59 இடங்களிலும், அதிமுக 47 இடங்களிலும் வென்றன.

திமுகவுக்கு இருக்கும் சிக்கல்

1967, 1971 தேர்தலுக்கு பின்னர் திமுக தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியமைக்கவே இல்லை. 2011ஆம் ஆண்டு தோல்விக்கு பின்னர் சுமார் 10 ஆண்டுகள் திமுக காத்திருந்தது. 2021ஆம் ஆண்டில்தான் ஆட்சியை பிடித்தது. நிச்சயம் 2026 தேர்தலை திமுக வெல்லும் என பல அரசியல் பார்வையாளர்கள் கணித்த நிலையில், தவெக அனைத்தையும் தவிடுபொடியாக்கியது.

அதிமுகவுக்கு வரும் பிரச்னைகள்

திமுக பிரதான எதிர்க்கட்சியாக உள்ள நிலையில், அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டு எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்திருக்கிறது. தேர்தலுக்கு பின்னர் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வென்று 6 எம்எல்ஏக்கள் இதுவரை தங்களின் பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்துள்ளனர்.

இதனால், அதிமுகவின் எம்எல்ஏ பலம் 41 ஆக குறைந்திருக்கிறது. மேலும், அதிமுகவின் கட்சியும் பலம் இழந்துள்ளது. அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள், நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் தவெகவிலும், மாற்றுக் கட்சியிலும் தொடர்ந்து இணைந்து வருகின்றனர். 

அதேநேரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் உள்ளிட்டோர் கடும் அதிருப்தியில் இருப்பதையும் பார்க்க முடிகிறது. திமுக, அதிமுக உள்ளிட்ட இருப்பெருந்திராவிடக் கட்சிகளே தவெகவுக்கு எதிர்த்து தனித்து களமாடுவது கடினமாகி இருக்கிறது. விஜய்யை ஆட்சிக் கட்டிலில் இருந்து 2031ஆம் ஆண்டில் திமுக, அதிமுக எப்படி கீழிறக்கும் என்பதே பலரின் கேள்வியாக உள்ளது.

விஜய் vs தனுஷ்

அந்த வகையில், விஜய்யின் ஜோதிடர் என அறியப்படும் ரிக்கி ராதன் பண்டிட் 2031 சட்டப்பேரவை தேர்தல் குறித்து பரபரப்பான கணிப்பை தெரிவித்துள்ளார். 2031ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் தவெகவை எதிர்க்க திமுகவும், அதிமுகவும் ஒன்று சேரும் என்றும்; அதேநேரத்தில் தனுஷ் அரசியலுக்கு வந்தால், தவெகவுக்கு அவர்தான் முக்கிய எதிரியாக இருப்பார் என்றும் கணித்துள்ளார்.

திமுக, அதிமுகவை ஓரங்கட்டும் தனுஷ்

தனியார் யூ-ட்யூப் சேனலின் நிகழ்ச்சி ஒன்றின் மேடையில் பேசிய அவர், "நான் முன்கூட்டியே ஒரு நேர்காணலில் 2031ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் திமுகவும், அதிமுகவும் ஒன்றிணைந்துதான் எதிர்க்கும் என சொல்லியிருந்தேன். 

இப்போது சொல்கிறேன், 2031ஆம் ஆண்டில் ஒருவேளை தனுஷ் அரசியலுக்கு வருகிறார் என்றால் விஜய்க்கு தனுஷ்தான் போட்டியாக இருப்பார், நம்பர் இடத்திற்கு தனுஷ் போய்விடுவார். திமுக, அதிமுக இருக்காது.

இதை ஏன் சொல்கிறேன் என்றால், அவரது (தனுஷின்) ஜாதகத்தை நான் பார்த்திருக்கிறேன். அதனால் இதை சொல்கிறேன்" என்றார். இவர் எப்போது, எங்கு பேசினார் என்ற விவரங்கள் சரிவர தெரியவில்லை. வைரலாகி வரும் வீடியோவைும் தனிப்பட்ட முறையில் உறுதிசெய்யவில்லை.

தனுஷ் அரசியல் வருவாரா?

தனுஷ் சில நாள்களுக்கு முன்னர் தனது பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூரில் நடத்தப்பட்ட ரத்ததான நிகழ்வில் பங்கேற்றார். அந்நிகழ்வின் மேடையில் தனுஷ் பேசியவை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அவர் அரசியல் வருகைக்காகவே இவ்வாறு பேசுகிறார் என்றும் சமூக வலைதளங்களில் பலர் விவாதித்து வருவது குறிப்பிடத்தக்கது.

0
0
Report

கழட்டிவிடப்படும் இந்திய அணி பயிற்சியாளர்கள்... தொடர் தோல்விக்கு பின் முக்கிய மாற்றம்

Mumbai, Maharashtra:

India National Cricket Team Latest News : இந்திய அணி தொடர்ச்சியாக அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து நாடுகளில் டி20ஐ மற்றும் ஓடிஐ தொடர்களை இழந்துள்ளது. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது ஆறுதல் மட்டுமே...

இந்தச் சூழலில், இந்திய அணியின் தொடர் தோல்வியை அடுத்து முக்கிய பயிற்சியாளர் ஒருவர் தனது பொறுப்பில் இருந்து விலகி உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் ஒரு முன்னணி ஐபிஎல் அணிக்கு பயிற்சியாளராக சேர்ந்துள்ளார் எனவும் தகவல்கள் வருகின்றன.

மேலும் படிக்க | தோனியை ஓரங்கட்டினால் பயிற்சியாளராக வரேன்.. CSKக்கு 2 கண்டிஷன்களை போட்ட EX வீரர்

ரியான் டென் டோஷேட் ராஜினாமா

இந்திய அணியின் உதவி பயிற்சியாளரான ரியான் டென் டோஷேட் (Ryan Ten Doeschate) அவரது பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கேகேஆர் அணியில் அவர் பயிற்சியாளராக சேர்ந்துள்ளார் என தகவல்கள் கூறப்படுகிறது.

முன்னாள் நெதர்லாந்து அணி வீரரான ரியான் டென் டோஷேட், கௌதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றபோது இந்திய அணியில் இணைந்தார். கடந்த 2024ஆம் ஆண்டு ஜூலை மாதம் ரியான் டென் டோஷேட் இந்திய அணியில் இணைந்த நிலையில், 2026ஆம் ஆண்டு ஜூலை மாதத்துடன் அவரது ஒப்பந்தம் நிறைவடைந்தது. அதேபோல், பீல்டிங் பயிற்சியாளர் டி திலீப்பின் ஒப்பந்தமும் நீட்டிக்கப்படவில்லை.

தற்போதைய பயிற்சியாளர் குழு

தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் வந்தபோது அவருடன் பந்துவீச்சு பயிற்சியாளராக மார்னே மார்கல், உதவி பயிற்சியாளர்களாக அபிஷேக் நாயர் மற்றும் ரியான் டென் டோஷேட் ஆகியோரும் இந்திய அணியில் சேர்ந்தனர். பின்னர் பேட்டிங் பயிற்சியாளராக சிதான்ஷு கோடக் மற்றும் சுழற்பந்துவீச்சு பயிற்சியாளராக சாய்ராஜ் பஹூதுலே ஆகியோர் உள்ளனர்.

பொறுப்பு பயிற்சியாளர்கள்
தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர்
பேட்டிங் பயிற்சியாளர்  சிதான்ஷு கோடக்
பந்துவீச்சு பயிற்சியாளர் மார்னே மார்கல்
சுழற்பந்துவீச்சு பயிற்சியாளர் சாய்ராஜ் பஹூதுலே
பீல்டிங் பயிற்சியாளர் டி திலீப்

அபிஷேக் நாயர் போல்...

கடந்த 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அபிஷேக் நாயர் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார், தற்போது கேகேஆர் அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ளார். அதேபோல், ரியான் டென் டோஷேட் கேகேஆர் அணியின் பயிற்சியாளர் குழுவில் இணைவார் என தெரிகிறது.

மேலும் படிக்க | Explainer: CSK-வை பலப்படுத்த என்ன செய்ய வேண்டும்? ஹர்திக பாண்டியா டிரேட் வதந்தியின் உண்மை என்ன?

ஏன் டென் டோஷேட், திலீப் நீக்கம்?

  • தற்போதைய இந்திய அணியில் பீல்டிங் பயிற்சியாளராக டி திலீப் இருக்கிறார். திலீப் மற்றும் டென் டோஷேட் இந்திய அணியில் ஒரே வேலையைதான் செய்கிறார்கள் என பேச்சுக்கள் வந்தன.
  • டோஷேட் மற்றும் திலீப் ஆகியோரின் ஒப்பந்தம் நிறைவடைந்துவிட்டது. இருவரின் ஒப்பந்தமும் நீட்டிக்கப்படவில்லை என பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா உறுதியாக தெரிவித்துள்ளார்.
  • ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளராக இருந்த காலத்தில் இருந்து டி திலீப், இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளராக இருந்து வருகிறார்.
  • சமீப காலமாக இந்திய அணியின் பீல்டிங் சற்று பின்னடைவை சந்தித்திருக்கிறது, பல புதிய வீரர்கள் அணிக்குள் வந்திருக்கிறார்கள்.
  • எனவே, அவர்களை மேம்படுத்த புதிய பீல்டிங் பயிற்சியாளர் தேவை என பிசிசிஐ கருதியிருக்கலாம். இதனால், டென் டோஷ்டே மற்றும் திலீப் ஆகியோரின் ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டிருக்காது. இல்லையெனில், திலீப்பிற்கு பதில் வேறு பீல்டிங் பயிற்சியாளரையும் பிசிசிஐ விரைவில் நியமிக்கலாம்.

இந்திய அணியின் தற்போதைய நிலை

கௌதம் கம்பீர் பொறுப்பேற்ற பின்னர் இந்திய அணி 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி, 2026 ஐசிசி டி20 உலகக் கோப்பை என இரண்டு ஐசிசி கோப்பைகளை வென்றாலும், பல இருதரப்பு தொடர்களை இந்திய அணி இழந்திருக்கிறது. இந்திய அணி ஓடிஐ மற்றும் டி20ஐ தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது. டெஸ்டை பொறுத்தவரை 4ஆம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | இந்திய அணியில் முதல் வாய்ப்பு... அதுவும் 33 வயதில்... யார் இந்த சரண்ஷ் ஜெயின்?

0
0
Report
Advertisement

My Earth, My Duty: டெலிவரி பாய் டூ சுற்றுச்சூழல் மாற்றத்தின் நாயகன் - யார் இந்த சத்யம் தீட்சித்?

New Delhi, Delhi:

உலக இயற்கை வள பாதுகாப்பு தினத்தை (World Nature Conservation Day) முன்னிட்டு, Zee மீடியாவின் 'என் பூமி, என் கடமை' (My Earth, My Duty) பிரச்சாரத்தின் முதல் செய்திக் கட்டுரை, தனது தனிப்பட்ட வாழ்க்கைச் சாவல்களைச சுற்றுச்சூழல் சேவைக்கான லட்சியமாக மாற்றிய சத்யம் தீட்சித் என்ற இளம் சுற்றுச்சூழல் மாற்றத்தின் நாயகனின் பயணத்தை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது.

யார் இந்த சத்யம் தீட்சித்?

எளிய குடும்பப் பின்னணியை கொண்டவர் சத்யம். சைக்கிள் ரிக்சா ஓட்டுநராக இருந்து காவலாளியாக பணியாற்றிய ஒருவரின் மகன் தான் சத்யம். வாடகை வீட்டில் வளர்ந்த அவர், குடும்ப பொருளாதாரத்திற்குத் தோள்கொடுக்க பள்ளிப் பருவத்திலேயே மோமோஸ் (Momos) விற்பனை செய்து சம்பாதிக்கத் தொடங்கினார்.

கொரோனா காலத்தில் நடந்த திருப்பம்

தொடர்ந்து சத்யம் கல்லூரி காலத்தில் டெலிவரி நிர்வாகியாகவும் பணியாற்றிய அனுபவம், அவருக்குள் பொறுப்புணர்வையும் சேவை மனப்பான்மையையும் ஆழமாக விதைத்தது. கொரோனா பேரிடர் காலம் அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது.

தனிநபர் முயற்சி டூ இயக்கத்தின் வளர்ச்சி

சத்யம் குடிமைப்பணி தேர்வுக்கு (UPSC Exam) தயாராக திட்டமிட்டிருந்தார். இதனால், தனது கவனத்தை சமூக பணிகளின் பக்கம் திருப்பினார். அதன் தொடர்ச்சியாக தூய்மை, கழிவு மேலாண்மை மற்றும் விழிப்புணர்வு ஆகியவற்றை மையமாக கொண்டு மக்கள் பங்கேற்புடன் கூடிய சுற்றுச்சூழல் இயக்கம் ஒன்றை ஒருங்கிணைத்தார்.

ஆரம்பத்தில் வெறும் சில தன்னார்வலர்களுடன் மட்டுமே தொடங்கப்பட்ட இந்த முயற்சி, இன்று 200-க்கும் மேற்பட்ட நகரங்களில் ஒரு மக்கள் இயக்கமாகப் பரவியுள்ளது. இந்த மக்கள் இயக்கம் பொது இடங்கள் மற்றும் ஆற்றங்கரைகளில் தொடர்ச்சியாக தூய்மைப் பணிகளை மேற்கொண்டு, பல டன் கழிவுகளை அகற்றி சாதனை படைத்து வருகின்றனர்.

இயக்கத்தின் முக்கிய வேலைகள்

மேலும், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் ஆன்மீக வழிபாட்டுக் கழிவுகளை மறுசுழற்சி முறையிலும், சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத வகையிலும் பாதுகாப்பாக மறுசெயலாக்கம் செய்து அகற்ற இந்த இயக்கத்தினர் ஊக்குவித்து வருகின்றனர்.

வெறும் தூய்மை பணிகளோடு நின்றுவிடாமல், விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் மற்றும் சமூகப் பங்கேற்பு மூலம் குடிமக்கள் அனைவரும் தங்கள் சுற்றுப்புறத்தை பராமரிப்பதில் உரிமையும் பொறுப்பும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற மாற்றத்தையும் இந்த இயக்கம் முன்னெடுத்து வருகிறது.

உண்மையான மாற்ற மலர...

ஒரு தனிநபரின் உறுதியான எண்ணம், ஒரு பெரும் மக்கள் இயக்கமாக எப்படி உருவெடுக்கும் என்பதைக் கொண்டாடும் வகையிலும்; "சாதாரண மனிதர்கள் தங்களைச் சுற்றியுள்ள உலகத்திற்குப் பொறுப்பேற்கத் தொடங்கும்போதே உண்மையான மாற்றம் மலரும்" என்ற 'என் பூமி, என் கடமை' பிரச்சாரத்தின் மையக் கருத்தைப் பிரதிபலிக்கும் வகையிலும் சத்யம் அவர்களின் சாதனைப் பயணம் அமைந்துள்ளது.

0
0
Report

வெள்ளி வென்ற 'கோவில்பட்டி சிங்கம்' காமன்வெல்த்தில் அசத்திய முத்துப்பாண்டி ராஜா யார்?

Scotland:

Commonwealth Games 2026, Who Is Muthupandi Raja : காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் ஸ்காட்லாந்து தலைநகர் கிளாஸ்கோவ் நகரில் நடைபெற்று வருகிறது. காமன்வெல்த் கேம்ஸ் சங்கத்தில் உறுப்பினராக உள்ள 74 தேசங்கள் மற்றும் பிரேதசங்கள் இத்தொடரில் பங்கேற்றுள்ளன.

தடகள மற்றும் பாரா தடகள வீரர்கள் 32 பேர் உள்பட மொத்தம் 122 இந்திய வீரர்கள் காமன்வெல்த் தொடரில் பங்கேற்றுள்ளனர்.

நேற்றைய தினம் பளு தூக்குதல் போட்டியில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுக்கான போட்டிகள் நடைபெற்றன. பளு தூக்குதல் போட்டியில் மட்டும் இந்தியா தற்போது மூன்று பதக்கங்க வென்றுள்ளது. பாரா பவர்லிஃப்டிங் போட்டியிலும் ஒரு பதக்கம் வென்றுள்ளது.

மேலும் படிக்க | Asian Games 2026: இந்தியா - பாகிஸ்தான் மோதும் வாய்ப்பு.. வெளியான அட்டவணை

வீரர் போட்டி வென்ற பதக்கம்
ஜாந்து குமார் ஆடவர் ஹெவிவெயிட் பாரா பவர்லிஃப்டிங் வெண்கலம்
ரிஷிகாந்த சிங் ஆடவர் 60 கிலோ பளு தூக்குதல் வெள்ளி
மிராபாய் சானு மகளிர் 48 கிலோ பளு தூக்குதல் தங்கம்
முத்துபாண்டி ராஜா ஆடவர் 65 கிலோ பளு தூக்குதல் வெள்ளி

286 கிலோவை தூக்கிய ராஜா

முத்துபாண்டி ராஜா என பார்த்ததும், அனைவருக்கும் புரிந்திருக்கும்... ஆம், அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்தான். பளு தூக்குதலில் Snatch முறையில் 126 கிலோ மற்றும் Clean and Jerk முறையில் 160 கிலோ என மொத்தம் 286 கிலோவை அவர் தூக்கினார். 

ஆனால், மலேசியாவின் அஸ்னில் பிடின் 299 கிலோவை தூக்கி தங்கப்பதக்கத்தை வெல்ல, முத்துபாண்டி ராஜா வெள்ளிப்பதக்கத்தை வென்று மிரட்டினார். முத்துப்பாண்டி ராஜா காமன்வெல்த் தொடர் வரை, கடினமான போராட்டத்தை நினைவுக்கூர்வதன் மூலம், அவர் கடந்த வந்த பாதையை புரிந்துகொள்ளலாம்.

முத்துப்பாண்டி ராஜா கடந்து வந்த பாதை

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் முத்துப்பாண்டி ராஜாவுக்கு, பளு தூக்குதல் மேடையில் Snatch முறையில் தூக்கும்போது அவரது வலது பெருவிரலில் காயம் ஏற்பட்டது.

காயம் ஏற்பட்டபோது தேசிய முகாமில் அவர் இருந்தார், காயத்திற்கு பின் ராஜாவின் வலது முழங்கையும் கடினமாக வலிக்கத் தொடங்கியிருக்கிறது. பின்னர் புனேவுக்குச் சென்று வல்லுநர்களை சந்தித்தபோது அவர்தான் அறுவை சிகிச்சையை பரிந்துரைத்துள்ளார். 

ஏற்கெனவே 2019ஆம் ஆண்டில் ராஜா தனது அவரது இடது முழங்கையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்தார். காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டியில் Snatch முறையில் 123 கிலோவை தூக்க முயன்றபோது, இடது முழங்கையில் தசைநார் கிழிவு நேர்ந்தது. அதில் குணமடைந்து வரவே 2 ஆண்டுகள் ஆனது.

மேலும் படிக்க | மும்பை இந்தியன்ஸ் அணிக்கு செல்லும் ருதுராஜ் கெய்க்வாட்? வெளியான புது தகவல்! என்ன விவரம்?

மீண்டு வந்த முத்துப்பாண்டி ராஜா

அப்படியிருக்க ராஜா மீண்டும் அதேபோல் ஒரு போராட்டத்தை சந்திக்க வேண்டாம் என நினைத்தார். அடுத்து 2022 காமன்வெல்த் போட்டிக்கான தகுதிச்சுற்று போட்டிகளும் நடக்க இருந்தன. 

2021 தேசிய சாம்பியன்ஷிப்பில் 3ஆம் இடத்தை பிடித்து, காமன்வெல்த் தகுதிச்சுற்றில் பங்கேற்க இருந்தார். ஆனால், காயம் காரணமாக அதையும் அவர் தவறவிட நேர்ந்தது. தற்போது மீண்டும் அந்த போராட்டங்களை கடந்து 2026ஆம் ஆண்டில் வெள்ளிப் பதக்கத்தை வென்று அசத்தியிருக்கிறார்.

மூன்று அறுவை சிகிச்சைகள்

2019ஆம் ஆண்டில் இருந்து 2025ஆம் ஆண்டு வரை மட்டும் மூன்று அறுவை சிகிச்சைகளை ராஜா எதிர்கொண்டிருக்கிறார். இந்த காலகட்டத்தில் கடுமையான உடல்நலப் பிரச்னைகளையும் அவர் கடந்து வந்திருக்கிறார். இரண்டு முறை டெங்கு மற்றும் ஒரு மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருக்கிறார். மஞ்சள் காமாலையால் கடுமையாக உடல் எடையையும் இழந்துள்ளார்.

யார் இந்த முத்துப்பாண்டி ராஜா?

  • 26 வயதான முத்துப்பாண்டி ராஜா தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர். அவரின் தந்தை தீப்பட்டித் தொழிற்சாலையில் கூலி தொழிலாளியாக பணியாற்றுகிறார், தாயார் ஒரு இனிப்பு கடையில் துப்புரவு பணியாளராக உள்ளார்.
  • இவரின் மூத்த சகோதாரும் பளு தூக்குதல் வீரர் ஆவார். ஆனால், விளையாட்டு கைவிட்டுவிட்டு தற்போது தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.
  • ராஜாவின் தற்போது சென்னையில் இந்தியன் ரயில்வேயில் மின்சாரத்துறையில் பணியாற்றி வருகிறார்.

முத்துப்பாண்டி ராஜா தற்போது காமன்வெல்த் போட்டிகளில் பதக்கத்தை பெற்றதை நிச்சயம் ஒலிம்பிக்கிலும் பதக்கம் வென்று ஒட்டுமொத்த நாட்டையும் பெருமையில் ஆழ்த்துவார் என எதிர்பார்க்கலாம்.

பளு தூக்குதலில் இதுவரை கர்ணம் மல்லேஸ்வரி, மிராபாய் சானு ஆகியோர் மட்டுமே பதக்கம் வென்றுள்ளனர், ஆடவர் பிரிவில் யாருமே பதக்கம் வென்றதில்லை. எனவே, நம் கோவில்பட்டி முத்துபாண்டி ராஜா நிச்சயம் முதல் இந்தியராக அந்த பெருமையை பெருவார் என எதிர்பார்க்கலாம்.

மேலும் படிக்க |   2 நாள் சாப்பிடவே இல்லை... தங்கம் வென்ற பின் மிராபாய் சானு - காமன்வெல்த்தில் ஹாட்ரிக் இது!

0
0
Report

ஜூலை 31 முதல் கோழிக்கறி விற்பனை நிறுத்தம்! அப்போ சிக்கனுக்கு எங்கே போறது..?

Thanjavur, Tamil Nadu:

ஜூலை 31ஆம் தேதி முதல், தமிழ்நாடு, புதுச்சேரியில், காலவரையற்ற கடையடைப்பு மற்றும் வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக, தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பு அறிவித்திருக்கிறது. கறிக்கோழிகளுக்கு, தீவன கட்டுபாடு தொடர்பாக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக அமல்படுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனை கண்டித்துதான் கடையடைப்பு போராட்டம் நடைபெற இருக்கிறது. இந்த காரணத்தால், தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட இரு மாநிலங்களிலும் கோழிக்கறி தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பிருப்பதாக வணிகர்கள் தெரிவிக்கின்றனர். 

செயற்குழுக்கூட்டம்:

அரசின் இந்த அறிவிப்பு தொடர்பாக, தஞ்சாவூரில் தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பின் மாநில அவசர செயற்குழுக்கூட்டம் நடைபெற்றிருக்கிறது. இதில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான கோழி விற்கும் வணிகர்கள் பங்கேற்று ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில், கறிக்கோழிகளுக்கான தீவனக்கட்டுப்பாடு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை அஎரசு அனைத்து மண்டல மற்றும் மாவட்ட கால்நடைதுறை அதிகாரிகளுக்கும் தெளிவாக அறிவுறுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருக்கிறது. இதையடுத்து, விற்பனைக்காக அனுப்பப்படும் கறிக்கோழிகளுக்கு, குறைந்தது, 15 மணி நேரத்திற்கு முன்பாகவே தீவனம் வழங்குவதை நிறுத்த வேண்டுமென நடைமுறையை கோழி உற்பத்தியாளர்கள் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இந்த கூட்டத்தில் மாநில தலைவர் துரைராஜ், செயலாளர் சுந்தரலிங்கம், பொருளாளர் ஜான் கென்னடி மற்றும் தமிழ்நாடு, புதுச்சேரி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். இவர்களை தாண்டி, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான கோழி வணிகர்களும் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க | தாய்மாமன் தங்க மோதிர திட்டம் : ஒரு குடும்பத்தில் எத்தனை குழந்தைகளுக்கு 1 கிராம் தங்கம் கிடைக்கும்?

வணிகர்கள் கூறுவது என்ன?

வணிகர்கள் இந்த பிரச்னை குறித்து பேசினர். அப்போது, விற்பனைக்கு முன்பாகவே கோழிகளுக்கு தொடர்ந்து தீவனம் வழங்குவதால், அவற்றின் எடை செயற்கையாக அதிகரிக்கிறது. மேலும், செரிமானம் ஆகாத தீவனக்கழிவுகள் வெளியேறுவதால், சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுவதுடன், சுகாதாரப்பிரச்னைகளும் உருவாகும் அபாயம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். 

இது குறித்து பேசிய கோழி வணிகர்கள் கூட்டமைப்பின் மாநில தலைவர் துரைராஜ் செய்தியாளர்களிடம் பேசினார். தீவனக்கட்டுப்பாடு, அந்த நெறிமுறைகளை பின்பற்றாததால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து பேசிய அவர், இதில் பொருளாதாரம் மறைந்திருப்பதாகவும், கோழிகளுக்கு கடைசி வரை தீவனம் கொடுத்தால் அதன் எடை அதிகமாகி கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய முடியும் என்று யோசிப்பதாகவும் தெரிவித்திருக்கின்றனர். 

இதை வலியுறுத்திதான், வரும் 31ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மாநிலம் தழுவிய காலவரையற்ற கடையடைப்பு மற்றும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதற்கு முடிவு செய்திருப்பதாக கூறிய அவர், மேற்குறிப்பிட்ட நாளில் இரு மாநிலங்களிலும் கோழிக்கரி விற்பணை நிறுத்தப்படும் என்று தெரிவித்தார். இந்த போராட்ட அறிவிப்பால், தமிழ்நாடு முழுவதம் இருக்கும் ஒரு லட்சம் கோழிக்கறி கடைகள் மூடப்படும் என கூறப்படுகிறது. 

கறிக்கு எங்கே போறது? கவலையில் மக்கள்!

நம் ஊரை பொறுத்தவரை, கோழிக்கறியை விரும்பி சாப்பிடுபவர்கள் பல லட்சம் பேர் இருக்கின்றனர். ஒரு சிலருக்கு கறி இல்லை என்றால் அன்றைய தினத்தில் உணவே இறங்காது. ஆட்டிறைச்சியின் விலை அதிகம் என்பதால், கோழிக்கறியை பல்வேறு இல்லங்களில் அடிக்கடி செய்வர். அப்படி இருக்கையில், வரும் 31ஆம் தேதி கோழிக்கறி விற்கப்படாது என்று அறிவிப்பு வெளியாகி இருப்பது பொது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதே நிலை தொடருமா, அல்லது அன்று ஒரு நாள் மட்டும் இந்த நிலையா என்பது அவர்களின் கேள்வியாக இருக்கிறது.

மேலும் படிக்க | மயிலாடுதுறை: ரூ.3,000 தரும் தமிழக அரசு.. யாரெல்லாம் பெறலாம்? வெளியான அறிவிப்பு!

0
0
Report
Advertisement

2 நாள் சாப்பிடவே இல்லை... தங்கம் வென்ற பின் மிராபாய் சானு - காமன்வெல்த்தில் ஹாட்ரிக் இது!

Scotland:

Mirabai Chanu Gold Medal, Commonwealth Games 2026 : ஸ்காட்லாந்து நாட்டில் கிளாஸ்கோவ் நகரில் 2026 காம்ன்வேல்த் கேம்ஸ் - விளையாட்டுத் தொடர் கடந்த ஜூலை 23ஆம் தேதி அன்று நடைபெற்று வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா விளையாட்டு போட்டிகளும் நடைபெற்று வருகின்றன. மொத்தம் 10 விளையாட்டுகள் நடைபெறுகின்றன.

இந்நிலையில், நேற்றிரவு (ஜூலை 26) நடந்த மகளிருக்கான பளு தூக்குதல் போட்டியில் 48 கிலோ பிரிவில் இந்தியாவின் பளு தூக்குதல் சூப்பர்ஸ்டார் அறியப்படும் சைக்கோம் மிராபாய் சானு தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் காமன்வெல்த் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில், மகளிர் பளு தூக்குதல் பிரிவில் தொடர்ந்து மூன்று முறை தங்கப்பதக்கத்தை வென்று மிராபாய் சானு சாதனை படைத்திருக்கிறார்.

0
0
Report

Kargil War Explainer : பாகிஸ்தான் சதியை அம்பலப்படுத்திய போன் கால்... இந்தியாவின் மாஸ்டர் பிளான்

New Delhi, Delhi:

Kargil War 1999 Explainer : 1999ஆம் ஆண்டு மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை 'கார்கில் போர்' நடைபெற்றது. முன்னதாக, 1998ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகளுமே அணு ஆயுத சோதனையை மேற்கொண்டது. இது பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை உண்டாக்கியது. பதற்றத்தை தணிக்கவும் இரு நாடுகள் பல முன்னெடுப்புகளை முயற்சித்தன.

அப்போது இந்திய பிரதமராக இருந்த அடல் பிஹாரி வாஜ்பாய் லாகூர் பஸ் டூர் சென்றார். 1999ஆம் ஆண்டு பிப். 21ஆம் தேதி இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கும் இடையே அமைதியை ஏற்படுத்த 'லாகூர் பிரகடனம்' என்ற ஒப்பந்தம் கையெழுத்தானது. வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தில் வாஜ்பாய் மற்றும் அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆகியோர் கையெழுத்திட்டனர்

ஆனால் மறுபக்கம், அதே பிப்ரவரி மாதத்தில் அப்போதைய பாகிஸ்தான் ராணுவ தளபதி பர்வேஸ் முஷாரப் இந்தியா மீதான தாக்குதலுக்கு தயாராகி வந்தார். பர்வேஸ் முஷாரப்பின் நடவடிக்கைகள்தான் கார்கில் போருக்கு தொடக்கப் புள்ளியாக அமைந்தது.

Lahore Declaration

மேலும் படிக்க | 1947 போர் முதல் ஆபரேஷன் சிந்தூர்​ வரை: IND vs PAK மோதல் வரலாறு - ஒரு பார்வை

பாகிஸ்தான் போட்ட சதித்திட்டம்

பனிக்காலத்தில், கார்கில் பகுதியில் மைனஸ் 40 டிகிரி குளிர் இருக்கும். இந்த கடுமையான குளிர் காரணமாக, இந்தியா - பாகிஸ்தான் படை வீரர்களுக்கு மத்தயில் ஒரு புரிதல் நிலவி வந்தது. அதாவது, பனிக்காலத்தில் அந்த எல்லையை விட்டு இரு நாட்டு வீரர்களும் சென்றுவிடுவார்கள். கோடை வருவதற்கு முன் மீண்டும் அங்கு திரும்பி வருவார்கள்.

ஆனால், 1999ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாகிஸ்தான் படை இதில் தில்லுமுல்லு செய்ய துணிந்தது. படை வீரர்களாக இல்லாமல் பயங்கரவாதிகள் போல் வேடமிட்டு, காலியாக கிடந்த இந்திய ராணுவத்தின் முகாம்களுக்குள் போல் அத்துமீறி நுழைந்தனர். அங்கிருந்து அவர்கள் இந்திய வீரர்களுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டினர்.

ஸ்ரீநகர் - லே பகுதிகளை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 1A வழியாகச் செல்லும் இந்திய வீரர்களை தாக்கி, லடாக்கை இந்தியாவில் இருந்து பிரிப்பதே அவர்களின் திட்டமாக இருந்தது. அதாவது, 1971 போரில் இந்தியாவிடம் ஏற்பட்ட தோல்விக்கு பழிவாங்கும் விதத்தில், சியாச்சின் பனியாறு பகுதியை கைப்பற்றுவதே அவர்களின் நோக்கம்.

ஆப்ரேஷன் விஜய் தொடங்கியது

ஆனால், பாகிஸ்தானியர்கள் கார்கில் மலைப் பகுதிகளில் ஊடுருவியிருக்கிறார்கள் என்பது ஆடு மேய்ப்பவர்களின் மூலம் இந்திய ராணுவத்திற்கு மே மாதத்தில் தகவல் கிடைத்துள்ளது. உடனே இந்திய பிரதேசத்தில் அத்துமீறி நுழைந்திருக்கும் எதிரிகளை விரட்டியடிக்க 'ஆப்ரேஷன் விஜய்' நடவடிக்கையை இந்திய ராணுவம் தொடங்கியது. மே 10ஆம் தேதி இந்த நடவடிக்கை தொடங்கியது.

தேதி முக்கிய நிகழ்வு
பிப்., 1999 பாகிஸ்தானிய படைகள் எல்லை கடந்த இந்திய முகாம்களை ஆக்கிரமித்தது.
மே 3, 1999 உள்ளூர் ஆடு மேய்ப்பவர் ஊடுருவல்காரர்களை கண்டு, இந்தியாவுக்கு தகவல் அளித்தார்.
மே 5, 1999 இந்திய ராணுவம் அந்த பகுதியை ஆய்வு செய்ய ஒரு படைப்பிரிவை அனுப்பியது, இவர்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
மே 10, 1999 கார்கில் மலையை கைப்பற்ற ஆப்ரேஷன் விஜய் நடவடிக்கை தொடங்கியது.

மேலும் படிக்க | கார்கில் நாயகர்கள்! போரில் உயிர் தியாகம் செய்த ஹீரோக்கள் யார்?

இந்தியாவுக்கு இருந்த சிக்கல்கள்

போர் களமே கடுமையானது. ஆனால், இப்போது கடல் மட்டத்தில் இருந்து 18,000 அடி உயரம், மைனஸ் டிகிரி குளிர், எதிரிகளின் அதிரடி தாக்குதல் என அனைத்தும் இந்தியாவுக்கு கடினமானச் சூழலை கொடுத்தது. 

ஆனால் இந்திய ராணுவம் மிகுந்த துணிச்சலுடன், தைரியத்துடன் டைகர் ஹில், டோலோலிங் போன்ற சிகரங்களை கைப்பற்றியது. இந்தியாவின் போஃபர்ஸ் தூப்பாக்கிகளும், மிராஜ் போர் விமானங்களும் எதிரிகளை பீதியடையச் செய்தன.

ஆதரவளிக்காத அமெரிக்கா

அந்த சமயத்திலும் அமெரிக்கா GPS டேட்டாவை இந்தியாவுக்கு தர மறுத்தது. இதனால், இந்திய ராணுவத்திற்கு எதிரிகளின் முகாம்களை கண்டறிவது கடினமாக இருந்தது. தாக்குதலும் இதனால் துல்லியமாக இல்லை. ஆரம்ப கட்டத்தில், பல ராணுவ வீரர்கள் உயிர் தியாகம் செய்ய வேண்டியிருந்தது. 

பாகிஸ்தான் வீரர்கள் ஏற்கெனவே உயரமான இடங்களை ஆக்கிரமித்திருந்ததால், அவர்களுக்கு இந்திய வீரர்கள் மீதான தாக்குதல் எளிதாகவே இருந்தது.

இந்திய ராணுவத்துடன், விமானப் படை கைக்கோர்த்த பின்னர் பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இந்திய ராணுவத்தினர் கூட எதிர்பார்க்காத வழிகளில் கயிறுகள் மூலம் மலையேறி, இரவில் எதிரி முகாம்கள் மீது மின்னல் வேக தாக்குதல் நடத்தி பாகிஸ்தானை அச்சுறுத்தியது.

தொலைப்பேசி உரையாடல் பதிவு

இந்த போர் நிறுத்துவதற்கும் முக்கியமான புள்ளியாக அமைந்தது, முஷாரபின் ஒரு போன் கால்தான். கார்கில் போர் நேரத்தில், முஷாரப் சீனாவுக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்தார். 

அங்கிருந்து பாகிஸ்தான் ராணுவத்தின் முக்கிய அதிகாரியான அஜீஸ் கான் என்பவருடன் சாட்டிலைட் போன் மூலம் உரையாடியிருக்கிறார். இந்த உரையாடல்களை இந்தியாவின் உளவு அமைப்பான R&AW துல்லியமாக பதிவு செய்தது.

Nawas Sherif

மே 26 மற்றும் மே 29 ஆகிய தேதிகளில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு அழைப்பை பதிவு செய்யப்பட்டது. அப்போது R&AW அமைப்பின் தலைவர் அரவிந்த் டேவ், முஷாரப் - அஜீஸ் கான் இடையேயான இரண்டு தொலைப்பேசி உரையாடல்களை பிரதமர் வாஜ்பாயிடம் கொண்டுவந்தார். 

கார்கில் போரில் சண்டையிட்டு வருபவர்கள் பயங்கரவாதிகள் அல்ல, பாகிஸ்தான் ராணுவத்தின் வடக்கு காலாட்படை வீரர்கள் என்பது பாகிஸ்தான் ராணுவத் தளபதியான முஷாரப்பின் பேச்சின் மூலம் அம்பலமாகிவிட்டது. முஜாஹிதீன்களின் பங்கு இதில் மிகக் குறைவு என்பதும் தெரிந்தது.

மேலும் படிக்க | கார்கில் போரின் நாயகன்.. யார் இந்த மேஜர் சரவணன் மாரியப்பன்? தமிழக வீரரின் கதை

பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட நெருக்கடி

அதுவரை கார்கில் போருக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்றும் இது பயங்கரவாதிகளின் தாக்குதல் என்றும் பாகிஸ்தான் அரசு தெரிவித்து வந்தது.

பர்வேஸ் முஷாரப்பின் இந்த தொலைபேசி உரையாடல் பதிவுகள் ஜூன் 11ஆம் தேதி ஊடகங்களில் வெளியான பின்னர், பாகிஸ்தானுக்கு சிக்கல் தொடங்கியது. 

சீனா பாகிஸ்தானுக்கு ஆதரவளிக்க மறுத்தது. ஆரம்பத்தில் இருந்து GPS டேட்டாவை இந்தியாவுக்கு கொடுக்க மறுத்த அமெரிக்கா, போரை நிறுத்த முக்கிய பங்கை செலுத்தியது.

RA&W பதிவு செய்து பிரதமரிடம் கொடுத்த தொலைப்பேசி உரையாடல்கள் குறித்து இந்த தகவல்கள் வாஜ்பாயின் தனிச் செயலாளராக பல ஆண்டுகள் பணியாற்றிய முன்னாள் அரசு உயர் அதிகாரி சக்தி சின்ஹா எழுதிய "Vajpayee: The Years That Changed India" (2020) புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. கார்கில் போர் நடந்த நேரத்திலும் சக்தி சின்ஹா பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றியிருக்கிறார்.

நவாஸ் ஷெரீப்புக்கு எப்போது தெரிந்தது?

இவை ஒருபுறம் இருக்க, நவாஸ் ஷெரீப்பிற்கு, முஷாரப்பின் நடவடிக்கை எப்போது தெரிந்தது என்பதிலும் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன.

இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கை குறித்து பிரதமர் நவாஸ் ஷெரீப் உடன் பகிர்ந்துகொண்டதாக முஷாரப் அவரது 'In The Line Of Fire' என்ற புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், நவாஸ் ஷெரீப் சார்ந்த பாகிஸ்தான் முஸ்லீம் லீக் - PML(N) கட்சி வெளியிட்ட Fact Sheet எனும் அறிக்கையில், கார்கில் தாக்குதல் குறித்து முஷாரப் மே மாதம் தகவல் தெரிவித்திருக்கிறார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய ராணுவம் இதில் தலையிட்ட பின்னரே முஷாரப், நவாஸ் ஷெரீப்பிடம் மே 17ஆம் தகவல் தெரிவித்திருக்கிறார். அதுவும் முழுமையாக சொல்லப்படவில்லை என்றும் Fact Sheet குறித்து விவரித்து பேசிய PML(N) கட்சியின் செயலாளர் அஷான் இக்பால் தெரிவித்திருந்தார். 

அதாவது, பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ராணுவம் போர் தொடுத்ததால், அதற்கு பயந்துதான் முஷாரப் நவாஸ் ஷெரீப்பிடம் தகவல் தெரிவித்தாகவும் கூறியிருக்கிறார்.

கிளிண்டன் கொடுத்த உளவுத்துறை ரிப்போர்ட்

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஜூலை 4ஆம் தேதி அன்று அமெரிக்கா சுற்றுப்பயணம் செந்றிருந்தார். அப்போது அமெரிக்க அதிபராக இருந்து கிளிண்டன், உளவுத்துறை ரிப்போர்ட்களை ஷெரீப்பிடம் கொடுத்தார். இந்தியாவை தாக்க பாகிஸ்தான் ராணுவ அணு ஆயுத ஏவுகணைகளை தயாரித்து வருவதாக அறிக்கையில் இருந்தது, இது ஷெரீப்பை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. 

போர் முடிந்தது எப்படி?

எனவே, நிபந்தனையின் உடனடியாக போரை நிறுத்த வேண்டும் அல்லது கடுமையான பொருளாதார தடைகள் பாகிஸ்தான் மீது விதிக்கப்படும் என கிளிண்டன் எச்சரித்தார் என கூறப்படுகிறது. அடுத்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் ஈடுபட்டது. தொடர்ந்து, 1999ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் தேதி போர் முடிவுக்கு வந்தது.

527 இந்திய வீரர்கள் வீரமரணம்

இந்திய தரப்பு: ஆப்ரேஷன் விஜய் நடவடிக்கையில் சுமார் 527 இந்திய படை வீரர்கள் உயிரிழந்ததாக அரசு ஆணவங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1,363 வீரர்கள் காயமடைந்துள்ளனர். இந்த போரில் இருந்து முக்கிய பாடமாக GPS டேட்டாவுக்கு அமெரிக்காவை சார்ந்திருக்காமல், இந்தியா தனது செயற்கைக்கோள் வழிசெலுத்தல் அமைப்பை நிறுவியது.

பாகிஸ்தான் தரப்பு: 1999 போரில் பாகிஸ்தான் படைவீரர்கள் 453 பேர் உயரிழந்ததாக அந்நாடு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால், இந்தியா மற்றும் சுயாதீனமாக ஆய்வுமேற்கொண்டவர்கள் படைவீரர்கள் மற்றும் ஒழுங்கற்ற துணை ராணுவ படைவீரர்கள் என 700 முதல் 4000 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என கணக்கிட்டனர்.

மேலும் படிக்க | கார்கில் போர் சோகம் : இறந்த வீரர்கள், கைவிட்ட பாகிஸ்தான் - 27 ஆண்டுகள் காத்திருப்பு! முடிவு என்ன?

0
0
Report
Advertisement

மோடி அரசை அசைத்து பார்த்த Gen Z படை... 12 ஆண்டுகளில் முதல் ராஜினாமா

New Delhi, Delhi:

Dharmendra Pradhan Resignation : பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 12 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி செய்து வருகிறது. பல்வேறு அமைச்சரவை மாற்றங்களை கடந்த 12 ஆண்டுகளில் பாஜக பார்த்திருந்தாலும், மக்களின் போராட்டம் காரணமாக இதுவரை எந்த அமைச்சரும் ராஜினாமா செய்ததில்லை.

பிரதமர் மோடி தலைமையிலான 12 ஆண்டுகால ஆட்சியில் உள்ள பல அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் இதற்கு முன்பும் எழுந்துள்ளன. ஆனால், பாஜக பொதுவாக அத்தகைய கோரிக்கைகளைப் புறக்கணித்தபடியே தனது அமைச்சர்களுக்கு ஆதரவாக நின்றுள்ளது.

போராட்டங்களும்... பதவி விலகாத அமைச்சர்களும்...

அந்த வகையில், இதற்கு முன் பிரதமர் மோடி ஆட்சியில் எழுந்த தீவிர போராட்டங்கள் நடந்தும் பதவி விலகாத அமைச்சர்கள் குறித்து இங்கு காணலாம்.

  • கொரோனா பெருந்தொற்று காலத்தில் சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. 
  • எப்ஸ்டீன் பைல்ஸ் விவகாரத்துக்குப் பிறகு மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. 
  • மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டத்தின் போது நரேந்திர சிங் தோமரையும் பதவி விலக கோரப்பட்டது.
  • நாடு முழுவதும் ஏராளமான ரயில் விபத்துக்குப் பிறகும் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன.

எம்.ஜே. அக்பர் விதிவிலக்கு 

ஆனால் இவர்கள் யாரும் உடனடியாக பதவி விலகவில்லை. மோடி தலைமையிலான அரசு அரசியல் அழுத்தத்திற்கு பணியத் தயாராக இல்லை என்ற பேசப்பட்டு வந்தது.

இதுவரை மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் தவிர, தார்மிகப் பொறுப்பை ஏற்று பதவி விலகிய அமைச்சர்கள் யாருமில்லை. பாஜகவை சேர்ந்த இணையமைச்சர் எம்.ஜே அக்பர் மீது 20 பெண் ஊடகவியலாளர்கள் பாலியல் புகார் அளித்து இருக்கிறார்கள்.

இது பாஜக கட்சிக்கு பெரிய சிக்கலை உண்டாக்கிய நிலையில் 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பதவி விலகினார். அமைச்சரவை மாற்றத்தில் நீக்கப்பட்டவர்கள், தனிப்பட்ட காரணங்களாக விலகியவர்கள் வேறு கதை.

தர்மேந்திர பிரதான் ராஜினாமா

ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான 12 ஆண்டுகால ஆட்சியில் முதல்முறையாக முழு மக்கள் போராட்டத்தால் ஒரு மத்திய அமைச்சர் பதவி விலகி உள்ளார்.

நாடு தழுவிய அளவில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் தொடர் போராட்டம் காரணமாக, நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

0
0
Report

நீட் போராட்டத்தில் அமைச்சரில் மகள்... பிரதமருக்கு எதிராக கோஷம் - ஷாக் ஆகும் பாஜக

Guwahati, Assam:

NEET Paper Leak Protest : டெல்லியில் மாணவர் போராட்டம் அன்றாடம் தீவிரமடைந்து வருகிறது. காக்ரோச் ஜனதா கட்சி என்ற பெயரில் பெருந்திரளான இளைஞர்கள், மாணவர்கள் நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என தொடர்ச்சியாக போராடி வருகின்றனர். 

டெல்லியில் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாணவர் போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டை பொருத்தவரை, சென்னையில் நீட் தடைக் கோரி போராட்டம் நடைபெறுகிறது.

மேலும் படிக்க | Explained : 1997ல் வினாத்தாள் கசிவை எதிர்த்த தர்மேந்திர பிரதான்! இன்று அதே சர்ச்சையில் சிக்கியது எப்படி?

அரசு தரப்பில் சொல்வது என்ன?

காக்ரோச் ஜனதா கட்சி ஆதரவாளர்கள் மட்டுமின்றி இடதுசாரி மாணவ அமைப்பினர், காங்கிரஸ் மாணவ அமைப்பினர் என பல்வேறு மாணவ அமைப்பினரும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

டெல்லியில் போராட்டக்காரர்களின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள், தண்டனைகள், கட்டுப்பாடுகள் உள்ளிட்டவை சீர்திருத்தங்கள் அடங்கிய சட்ட மசோதாவை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் 2வது வாரத்தில் தாக்கல் செய்ய இருப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

உறுதியாக நிற்கும் மாணவர்கள்

ஆனால், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்வது மட்டுமே போராட்டத்திற்கான தீர்வாக இருக்கும் என டெல்லியில் மாணவர்கள் உறுதிபட உள்ளனர். ஒருவேளை தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தாலும், தமிழகத்தில் போராடும் மாணவர்களின் முடிவு என்னவாக இருக்கும் என்பதும் சரிவர தெரியவில்லை.

அசாமிலும் நடக்கும் போராட்டம்

இந்தச் சூழலில், மாணவர்கள் போராட்டம் பாஜக ஆளும் அசாம் மாநிலத்திலும் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது. அசாம் தலைநகர் கௌகாத்தியில் உள்ள சாச்சல் எனும் பகுதியில் நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாகவும் உள்ளது.

மேலும் படிக்க | Explained: டிகிரி படிக்க விரும்பாத Gen Z.. கல்வி அமைப்பில் என்ன பரச்னை? முழு ரிப்போர்ட்

போராட்டத்தில் அமைச்சர் மகள் 

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இந்த போராட்டத்தில் பாஜக அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் அமைச்சர் கேஷப் மஹந்தா என்பவரின் மகள் திபிஷா மஹந்தாவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவரின் போராட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராகவும் தொடர்ந்து கோஷம் எழுப்பியதையும் வைரலாகும் அந்த வீடியோவில் காண முடிகிறது. 

பதாகைகளை ஏந்தி, கோஷமிட்டு மாணவர்களுடன் மாணவராக திபிஷா போராடி வருகிறார். மத்திய அரசு இந்த நீட் தேர்வு முறைக்கேட்டுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் முறைகேடுகளை களைய நடவடிக்கை என்றும் திபிஷா கோரிக்கை வைத்துள்ளார்.

யார் இந்த கேஷப் மஹந்தா?

திபிஷாவின் தந்தை கேஷப் மஹந்தா அசாம் மாநிலத்தில் அசோம் கண பரிஷத் கட்சியின் மூத்த தலைவர் ஆவார். அதாவது அக்கட்சியின் மாநிலத் தலைவர் அதுல் போராவிற்கு பிறகு மூத்த தலைவராக கேஷப் மஹந்தா அறியப்படுகிறார். பாஜக தலைமையிலான கூட்டணி அரசில் அசோம் கண பரிஷத் கட்சியும் உள்ளது. 2016ஆம் ஆண்டில் இருந்து பாஜக அரசில் கேஷப் அமைச்சராக இருந்து வருகிறார்.

அசாம் அரசின் மூத்த அமைச்சரின் மகளே, இதுபோன்ற கூட்டணிக்கு தலைமை வகிக்கும் பாஜகவுக்கு எதிராக போராட்டம் நடத்துவதும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

அசாம் முதல்வர் சொன்னது என்ன?

மாணவர்களின் போராட்டம் என்பது அவர்களின் உரிமை என்றும் செய்தியாளர் சந்திப்பில் அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். "இது மாணவர் போராட்டம். அவர்களின் கோரிக்கையையும், வாதங்களையும் ஏற்கிறோம். இந்த பிரச்னை குறித்து பிரதமர் உற்றுநோக்கி வருகிறார். 

ஆனால், அதேநேரத்தில் அசாம் மாநிலம் ஒரு முக்கியமான கட்டத்தில் இருக்கிறது. ஏனென்றால் அசாம் மாநிலத்தை வெள்ளம் கடுமையாக பாதித்துள்ளது. எனவே, இயற்கை பேரிடரில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என்றார். அசாமில் போராட்டம் அமைதியாக நடைபெற்று வருகிறது. நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக மட்டுமே போராட்டங்களில் கோஷம் எழுப்பப்படுகிறது.

மேலும் படிக்க | 'இளைஞர்களுக்கு நன்றி...' பிரதமர் மோடி இன்ஸ்டாவில் போட்ட வீடியோ - பேசியது என்ன?

0
0
Report

சோனம் வாங்சுக் உண்ணாவிரதம் ஓவர்... 26 நாட்களுக்கு பின் திடீர் முடிவு - காரணம் என்ன?

New Delhi, Delhi:

Sonam Wangchuk Hung Strike : சோனம் வாங்சுக் அவரது 26 நாள் தொடர் உண்ணாவிரதத்தை இன்று (ஜூலை 24) நிறைவு செய்தார். மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா, ஜிதேந்திர சிங் மற்றும் லே லடாக் உச்ச அமைப்பின் மூத்த தலைவர்கள் முன்னிலையில் அவர் தனது உண்ணாவிரதத்தை நிறைவு செய்தார்.

இதுகுறித்து சோனம் வாங்சுக் அவரது X தளத்தில், பல்வேறு நிபந்தனைகள் மீதான நீண்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகும், நாட்டில் ஏற்படக்கூடிய வன்முறையைக் கருத்தில் கொண்டும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

0
0
Report
Advertisement

பிரதமர் மோடி இன்று எடுக்கும் முக்கிய முடிவு... மாணவர்கள் போராட்டம் வெற்றியா?

New Delhi, Delhi:

PM Modi Video Statement, CJP Student Protest : டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (CJP) என பெயரிடப்பட்ட இயக்கத்தினர் நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வினாத்தாள் கசிவு போன்ற வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றம் ஒன்றை டெல்லி உயர் நீதிமன்றம் அறிவித்திருந்தது, இதைத் தொடர்ந்து பிரதமர் மோடியின் X பதிவு வெளியிடப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி ஒரே நாளில் பதிவிடும் 2வது பதிவு இதுவாகும்.

மேலும் படிக்க | Explained: Rule 267 என்றால் என்ன? NEET வினாத்தாள் கசிவு விவகாரத்தில் அது ஏன் முக்கியம்?

பிரதமர் மோடி அந்த வீடியோவில் இந்தியில் பேசியதாவது, "வினாத்தாள் பிரச்னை என்பது சாதாரணப் பிரச்னை அல்ல என்பது எனக்கு தெரியும். இது லட்சக்கணக்கான மாணவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் மிகுந்த வேதனையை தந்துள்ளது. அதனாலேயே கடந்த இரண்டரை மாதங்களில் இதுசார்ந்து பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

குற்றவாளிகள் பிடிபட்டு சிறையில் இருக்கின்றனர். மாணவர்கள் ஒரு வருடத்தைக் கூட வீணாக்காமல் இருப்பதை உறுதி செய்வதே எங்களின் மிக முக்கியமான பொறுப்பாக இருந்தது, தேர்வுகளை உடனடியாக நடத்துவது மிகவும் அவசியமாக இருந்தது. அரசு தனது முழு அதிகாரத்தையும் பயன்படுத்தி சுமார் 22 லட்சம் மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்தியது" என்றார். 

மேலும், விரைவு நீதிமன்றத்திற்காக நான் பல்வேறு துறைகளுக்கு இன்று அறிவுறுத்தல்களை வழங்கினேன்.ஒவ்வொரு துறையும் கடுமையாக உழைத்து நள்ளிரவில் எனக்கு ஒப்புதல் தெரிவித்திருக்கின்றன.

எனவே, நாளை அமைச்சரவையில் இதுகுறித்த விவாதம் நடைபெறும். அமைச்சரவையில் ஆலோசனைகளுக்கு பிறகு, இதற்கு இறுதி வடிவம் கொடுக்கப்படும். மேலும், நாடாளுமன்றத்தின் 2வது வாரத்தில் (ஜூலை 27 - திங்கள் முதல்) இந்த மசோதாவை கூடிய விரைவில் நிறைவேற்ற முயற்சிப்போம்" என்றார்.

மேலும் படிக்க | CJP போராட்டம்: ஜந்தர் மந்தரில் உணவுப் பார்சல்கள் அனுப்புவது யார்? நெகிழ்ச்சி தரும் கதை!

முன்னதாக, வினாத்தாள் கசிவு விவகாரத்தில் அலட்சியம் காட்டியதற்காக கல்வித்துறை செயலாளர் வினீத் ஜோஷி பதவி நீக்கம் செய்து பிரதமர் மோடி உத்தரவிட்டார். மேலும், வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பானவர்கள் மீதும், அலட்சியம் அல்லது அக்கறையின்மையை வெளிப்படுத்தியவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இது பிரதமர் மோடியின் உத்தரவாதம்" என பாஜக எம்.பி., நிஷிகாந்த் தூபே தெரிவித்துள்ளார்.

கடந்த 2025ஆம் ஆண்டு ஜனவரியில் உயர் கல்வித்துறையின் செயலாளராக வினீத் ஜோஷி பொறுப்பேற்றார். தற்போது அவர் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் செயலாளராக பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய கல்வித்துறை செயலாளராக நரேஷ் கங்க்வார் நேற்றிரவு நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல், ஊரக வளர்ச்சித்துறையின் கூடுதல் செயலாளராக இருந்த டி.கே. சுனில் குமார், பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையின் செயலாளராக நிமியக்கப்பட்டார்.

மேலும் படிக்க | சோனம் வாங்சுக் உண்ணாவிரதம் ஓவர்... 26 நாட்களுக்கு பின் திடீர் முடிவு - காரணம் என்ன?

0
0
Report

Explained: Rule 267 என்றால் என்ன? NEET வினாத்தாள் கசிவு விவகாரத்தில் அது ஏன் முக்கியம்?

New Delhi, Delhi:

இந்திய அரசியலில் மட்டுமல்லாமல், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள விவகாரம் நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு. இந்த விவகாரம் தற்போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடும் அரசியல் மோதலாக மாறியுள்ளது. ஒருபுறம், Rule 267-ன் கீழ் உடனடி விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன. மறுபுறம் விவாதத்திற்கு தயாராக இருக்கிறோம், ஆனால் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை முன்நிபந்தனையாக ஏற்க முடியாது என்று மத்திய அரசு தெரிவித்து வருகிறது.

இதன் விளைவாக, நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து முடங்கியுள்ளன. இந்தச் சூழலில் Rule 267 என்றால் என்ன? ஏன் அதற்காக எதிர்க்கட்சிகள் இவ்வளவு அழுத்தம் கொடுக்கின்றன? அரசின் நிலைப்பாடு என்ன? மாணவர்களுக்கு இதன் தாக்கம் என்ன? என்பதைக் காணலாம்.

Rule 267 என்றால் என்ன?

ராஜ்யசபா நடைமுறை விதிகளில் இடம்பெற்றுள்ள Rule 267, அவசர மற்றும் மிக முக்கியமான தேசிய பிரச்சினைகளை உடனடியாக எடுத்துக்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்ட ஒரு சிறப்பு நடைமுறை விதியாகும்.

இந்த விதியின் கீழ்...

  • அன்றைய திட்டமிடப்பட்ட அனைத்து அலுவல்களையும் ஒத்திவைக்க முடியும்.
  • அவசரமான ஒரு விவகாரத்தை உடனடியாக விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளலாம்.
  • இதற்கு ராஜ்யசபா தலைவரின் (Chairman) அனுமதி அவசியம்.
  • எந்த விதியை இடைநிறுத்த வேண்டும், ஏன் வேண்டும் என்பதையும் உறுப்பினர் தெளிவாக குறிப்பிட வேண்டும்.

இது சாதாரண விவாதத்திற்காக அல்ல. மிகவும் விதிவிலக்கான சூழ்நிலைகளில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டிய நடைமுறையாக கருதப்படுகிறது.

ஏன் Rule 267-ன் கீழ் விவாதம் வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன?

காங்கிரஸ் உள்ளிட்ட INDIA கூட்டணி கட்சிகள், நீட் வினாத்தாள் கசிவு என்பது வெறும் தேர்வு முறைகேடு அல்ல என்றும், லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் தேசிய பிரச்சினை என்றும் வாதிடுகின்றன.

அவர்கள் முன்வைக்கும் முக்கிய காரணங்கள்:

  • மாணவர்களின் நம்பிக்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
  • தேர்வு முறைமை மீது சந்தேகம் எழுந்துள்ளது.
  • அரசு உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும்.
  • கல்வி அமைச்சரின் பொறுப்பும் விவாதிக்கப்பட வேண்டும்.
  • சாதாரண விவாதமாக அல்லாமல் அவசர விவகாரமாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.

காங்கிரசை சேர்ந்த ஜெய்ராம் ரமேஷ் கூறியது என்ன?

காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், Rule 267-ன் கீழ் விவாதம் நடத்தினால்தான் இந்த பிரச்சினைக்கு உரிய முக்கியத்துவம் கிடைக்கும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மத்திய அரசின் பதில் என்ன?

மத்திய அரசு, விவாதத்திலிருந்து தப்பிக்கவில்லை என்று கூறியுள்ளது. அதேநேரம் மத்திய அரசு சில முக்கிய வாதங்களை வைத்துள்ளது. அதன் விவரம்..

  • நீட் விவகாரம் குறித்து விவாதிக்க தயாராக இருக்கிறோம்.
  • ஆனால் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை முன்நிபந்தனையாக ஏற்க முடியாது.
  • ஏற்கனவே Public Examinations (Prevention of Unfair Means) Act, 2024 அமல்படுத்தப்பட்டுள்ளது.
  • வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு மோசடிகளை தடுக்க கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
  • சிபிஐ சிறப்பு குழுக்கள் விசாரணை நடத்தி வருகின்றன.
  • தேர்வு முறையில் சீர்திருத்தம் செய்ய உயர்மட்ட நிபுணர் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

Public Examinations (Prevention of Unfair Means) Act, 2024 என்ன சொல்கிறது?

நீட் உள்ளிட்ட தேசிய அளவிலான தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகளை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு Public Examinations (Prevention of Unfair Means) Act, 2024 என்ற சட்டத்தை அமல்படுத்தியுள்ளது.

Public Examinations Act, 2024 சட்டத்தின் முக்கிய அம்சங்கள்

  • வினாத்தாள் கசிவுக்கு கடுமையான தண்டனை.
  • அமைப்புசார்ந்த தேர்வு மோசடிகளுக்கு சிறைத்தண்டனை.
  • அதிகபட்ச அபராதம் விதிக்கும் அதிகாரம்.
  • தேசிய அளவில் ஒரே சட்ட கட்டமைப்பு.
  • மாணவர்களின் நலனை பாதுகாக்கும் நோக்கம்.
  • போட்டித் தேர்வுகளின் நம்பகத்தன்மையை உயர்த்துவது.

Rule 267 குறித்து ராஜ்யசபா தலைவர் கூறிய விளக்கம் என்ன?

ராஜ்யசபா தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், Rule 267 குறித்து முக்கிய விளக்கமொன்றை அளித்துள்ளார்.

அவர் கூறியதாவது:

  • Rule 267 என்பது அசாதாரண சூழ்நிலைகளுக்கான விதி.
  • இதை தினசரி பயன்படுத்தக்கூடாது.
  • இது லோக்சபாவின் Adjournment Motion-க்கு இணையானது அல்ல.
  • ஒவ்வொரு பிரச்சினைக்கும் Rule 267-ஐ பயன்படுத்தினால் அதன் நோக்கம் பாதிக்கப்படும்.

நீட் விவகாரத்தில் நடைபெறும் விசாரணை என்னென்ன?

மத்திய அரசு தெரிவித்த தகவலின்படி..,

  • சிபிஐ சிறப்பு குழுக்கள் விசாரணை நடத்துகின்றன.
  • குற்றச் சதி (Criminal Conspiracy)
  • மோசடி (Cheating)
  • நம்பிக்கை மோசடி (Criminal Breach of Trust)
  • Public Examinations Act மீறல்
  • தேர்வு கும்பல்களின் செயல்பாடு

உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

தேர்வு முறையில் என்னென்ன சீர்திருத்தங்கள் பரிசீலனையில் உள்ளன?

மத்திய கல்வி அமைச்சகம் அமைத்துள்ள உயர்மட்ட குழு பின்வரும் அம்சங்களை ஆய்வு செய்து வருகிறது.

  • வினாத்தாள் தயாரிப்பு
  • பாதுகாப்பு நடைமுறைகள்
  • வினாத்தாள் விநியோகம்
  • டிஜிட்டல் பாதுகாப்பு
  • தேர்வு மைய கண்காணிப்பு
  • மதிப்பீட்டு முறை
  • முடிவுகள் வெளியிடும் நடைமுறை

விதி 267 கோரிக்கை: மாணவர் நலன் சார்ந்த அவசியமா அல்லது அரசின் மீதான அரசியல் அழுத்தமா?

காரணி

எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு

அரசின் / அவைத் தலைவரின் நிலைப்பாடு

நோக்கம் லட்சக்கணக்கான மாணவர்களின் அறநெறி மற்றும் நம்பிக்கையைக் காப்பது. அன்றாட அவைப் பணிகளை முடக்குவதும் அரசியல் அழுத்தம் தருவதும்
அவசரத்தன்மை முறைகேடுகளால் மாணவர்கள் தகுதி அடிப்படையிலான தேர்வின் மீது நம்பிக்கையை இழந்து வருகின்றனர். விவாதத்திற்கு அரசு தயார்; ஆனால் அவையின் விதிகளுக்குட்பட்டே அது நடக்க வேண்டும்

விதியின் பயன்பாடு

இது 'மிக அரிதான சூழல்' (Rarest of rare) என்பதால் விதி 267 பொருத்தமானது. தினமும் விதி 267-ஐப் பயன்படுத்துவது அதன் முதன்மை நோக்கத்தைச் சீர்குலைக்கும்.

மாணவர்களுக்கு இதன் நீண்டகால தாக்கம் என்ன?

நீட் விவகாரம் வெறும் அரசியல் விவாதமாக மட்டும் பார்க்கப்படுவதில்லை. இந்தியாவில் போட்டித் தேர்வுகளின் நம்பகத்தன்மை, மாணவர்களின் சம வாய்ப்பு, திறமை அடிப்படையிலான தேர்வு முறை ஆகியவற்றின் மீது பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பது மிக முக்கியமான சவாலாக உள்ளது.

அரசு புதிய சட்டம், சிபிஐ விசாரணை மற்றும் தேர்வு சீர்திருத்தங்களை முன்னிறுத்தினாலும், எதிர்க்கட்சிகள் உடனடி அரசியல் பொறுப்பேற்பும் நாடாளுமன்றத்தில் முன்னுரிமை விவாதமும் அவசியம் என வலியுறுத்துகின்றன.

இந்நிலையில், நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் நீதிமன்றம், விசாரணை அமைப்புகள் மற்றும் நாடாளுமன்றம் ஆகிய மூன்றிலும் தொடர்ந்து கவனத்தை ஈர்த்து வருகிறது. மாணவர்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பதற்கான நிரந்தர தீர்வுகள் எவ்வளவு விரைவாக நடைமுறைக்கு வருகின்றன என்பதே இந்த விவகாரத்தின் அடுத்த கட்டத்தை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருக்கும்.

NEET வினாத்தாள் கசிவு  மற்றும் Rule 267-ன் முக்கிய அம்சங்கள் என்ன?

  • Rule 267 மூலம் அன்றைய அலுவல்களை ஒத்திவைத்து அவசர விவாதம் நடத்த முடியும்.
  • நீட் வினாத்தாள் கசிவு குறித்து Rule 267-ன் கீழ் விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன.
  • கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை எதிர்க்கட்சிகள் கோருகின்றன.
  • ராஜினாமாவை முன்நிபந்தனையாக ஏற்க முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
  • Public Examinations (Prevention of Unfair Means) Act, 2024 மூலம் கடுமையான தண்டனைகள் அமலுக்கு வந்துள்ளன.
  • சிபிஐ சிறப்பு குழுக்கள் விசாரணை நடத்தி வருகின்றன.
  • தேர்வு முறையை முழுமையாக சீர்திருத்த உயர்மட்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
  • Rule 267 என்பது விதிவிலக்கான நடைமுறை என்றும் அதை அடிக்கடி பயன்படுத்தக் கூடாது என்றும் ராஜ்யசபா தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க - CJP போராட்டம்: ஜந்தர் மந்தரில் உணவுப் பார்சல்கள் அனுப்புவது யார்? நெகிழ்ச்சி தரும் கதை!

மேலும் படிக்க - மோடி அறிவிப்பை நிராகரித்த CJP... மன்னிப்பு கேளுங்கள், அமைச்சர் ராஜினாமா செய்யட்டும்

மேலும் படிக்க - தீவிரமடையும் டெல்லி போராட்டம்... "யாரும் தப்ப முடியாது" -பிரதமர் மோடியின் முக்கிய அறிவிப்பு

மேலும் படிக்க - டெல்லி நீட் போராட்ட களத்தில் கனிமொழி.. மத்திய அரசு மீது கடும் தாக்கு!

0
0
Report

மக்கள் பிரச்சினையை விட "ஜனநாயகன்" படம் முக்கியமா? தவெக அரசை சாடிய டிடிவி தினகரன்

Chennai, Tamil Nadu:

தமிழக அரசின் கவனம் மக்கள் நலப் பணிகளில் இருக்க வேண்டிய நேரத்தில், முதலமைச்சர் ஜோசப் விஜய் நடித்துள்ள "ஜனநாயகன்" திரைப்படம் தொடர்பான பணிகளில் அமைச்சர்களும் அரசு நிர்வாகமும் அதிக ஆர்வம் காட்டி வருவதாக அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார். இதே நேரத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட முட்டையில் இறந்த நிலையில் கோழிக்குஞ்சு இருந்ததாக வெளியான தகவலை சுட்டிக்காட்டி, அரசின் முன்னுரிமைகள் குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் படிக்க - 'ஜனநாயகன்' பார்க்க ஊழியர்களுக்கு அரை நாள் விடுமுறை.. திருப்பூர் நிறுவனத்தின் அறிவிப்பு வைரல்!

அமைச்சர்கள் ரசிகர் மன்ற நிர்வாகிகளா? -டிடிவி தினகரன் கேள்வி

இந்த விவகாரம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் டிடிவி தினகரன், மக்கள் நலனில் கவனம் செலுத்த வேண்டிய அரசு நிர்வாகமும் அமைச்சர்களும், நாளை வெளியாகவுள்ள "ஜனநாயகன்" திரைப்படத்தின் வெளியீட்டு ஏற்பாடுகளில் அதிக ஈடுபாடு காட்டுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் அரசு நிர்வாகம், பொதுமக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்குப் பதிலாக திரைப்பட வெளியீட்டை முன்னிறுத்துவது ஜனநாயக ஆட்சிக்கு ஏற்றதல்ல என்றும் அவர் விமர்சித்துள்ளார். அரசு நிர்வாகம் ரசிகர் மன்றத்தைப் போல செயல்படுவது "வெட்கக்கேடானது" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தரக் கட்டுப்பாடு குறித்து முக்கிய கோரிக்கை

அங்கன்வாடி மையத்தில் நடந்த சம்பவம் தனிப்பட்ட தவறு மட்டுமல்லாமல், உணவுப் பொருட்கள் கொள்முதல் மற்றும் விநியோகத்தில் தரக் கட்டுப்பாடு சரியாக பின்பற்றப்படுகிறதா என்ற சந்தேகத்தையும் எழுப்புவதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க - டெல்லி மாணவர்கள் போராட்டம்: CM விஜய் மௌனம் காப்பது ஏன்? - தவெக பதில் இதோ

அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன்  தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த பதிவில், 

மக்கள் பணியில் கவனம் செலுத்த வேண்டிய அரசு நிர்வாகமும், அமைச்சர்களும் அதனை புறந்தள்ளி, ரசிகர் மன்ற நிர்வாகிகளாக நாளை வெளிவரவுள்ள ஜனநாயகன் திரைப்பட பணிகளில் மும்முரம் காட்டி வருவது வெட்கக் கேடானது. 

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள ரகுராமபுரத்தில் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட முட்டையில் கோழிக்குஞ்சு இறந்து அழுகிய நிலையில் இருந்ததாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

பச்சிளம் குழந்தைகளின் ஊட்டச்சத்து தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்காற்றும் அங்கன்வாடி மையங்களில் அழுகிய நிலையில் வழங்கப்பட்டிருக்கும் முட்டை குழந்தைகளின் உடல் நலனையும், அவர்களின் ஆரோக்கியத்தையும் கேள்விக்குறியாக்கும் வகையில் அமைந்திருக்கிறது.

மக்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டிய அரசு நிர்வாகமும், அமைச்சர்களும் முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள் நடித்து வெளிவரவுள்ள ஜனநாயகன் திரைப்படத்தை கண்டுக்களிக்க ஆர்வம் காட்டுவதும் அதற்கான ஏற்பாடுகளை முன்னின்று செய்து கொண்டிருப்பதும் வெட்கக் கேடானது ஆகும். 

எனவே, குறிப்பிட்ட அங்கன்வாடி மையத்திற்கு முட்டைகளை விநியோகம் செய்த ஒப்பந்ததாரர் மீதும், கவனக்குறைவுடன் செயல்பட்ட அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுப்பதோடு, மாநிலம் முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு வழங்கப்படும் முட்டை உட்பட அனைத்து விதமான ஊட்டச்சத்து உணவுப் பொருட்களின் தரத்தை உரிய ஆய்வுக்கு உட்படுத்திய பின்னரே குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என சமூக நலத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

 

டி.டி.வி. தினகரன் பதிவின் முக்கிய அம்சங்கள் (Highlights)

அங்கன்வாடி முட்டையில் கோழிக்குஞ்சு இருந்ததாக வெளியான தகவல் பரபரப்பு.
அரசு மக்கள் நலனை விட திரைப்படத்தில் கவனம் செலுத்துவதாக டிடிவி தினகரன் குற்றச்சாட்டு.
"ஜனநாயகன்" திரைப்பட ஏற்பாடுகளில் அமைச்சர்கள் ஈடுபடுவது வெட்கக்கேடு என விமர்சனம்.
முட்டை வழங்கிய ஒப்பந்ததாரர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரிக்கை.
மாநிலம் முழுவதும் ஊட்டச்சத்து உணவுப் பொருட்களுக்கு தர ஆய்வு நடத்த வலியுறுத்தல்.

மேலும் படிக்க - விஜய் மாதிரி சைகை காட்ட எதிர்க்கட்சிகளுக்கு அனுமதி உண்டா? சபாநாயகர் விளக்கம்

0
0
Report
Advertisement
Advertisement
Back to top